இமாச்சலில் மீண்டும் நிலச்சரிவு.. சீட்டுக்கட்டு போல் சரியும் வீடுகள்.. பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சிம்லாவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் அதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. அதிலும் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் மட்டும் இந்த மழை தொடங்கியதிலிருந்து இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு ரூ 7000 கோடியாகும்.
இமாச்சலில் பிலாஸ்பூர், சம்பா, ஹமீர்பூர், காங்ரா, குலு, சிம்லா, கினார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. உத்தரகாண்ட்டில் 6 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சோலன் மாவட்டத்தில் ஜடோன் கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியாகிவிட்டனர்.
வெள்ளத்தில் இரு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் 6 பேரை உயிருடன் மீட்டதாக மீட்பு படையினர் தெரிவிக்கிறார்கள். சிம்லாவில் சம்மர்ஹில் பகுதியில் ஒரு சிவன் கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகிவிட்டனர். இந்த சம்பவத்தின் போது கோயிலில் 50 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது. நிலச்சரிவு அபாய பகுதிகள், ஆறுகள், நீர் நிலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இமாச்சலம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாச்சலில் மொத்தம் 621 கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. அது போல் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. இமாச்சலில் நிலச்சரிவு, கனமழையால் பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் சுதந்திர தின விழா எளிமையாக நடந்தது. கலாச்சார நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, சார்தாம் யாத்ரா என்று அழைக்கப்படும் புனித தலங்களுக்கான யாத்திரை இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
இமாச்சலில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. சிம்லாவில் இரு முறை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 14 உடல்களை மீட்டுள்ளனர். இமாச்சலில் கல்வி நிலையங்கள் வரும் 19 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. அது போல் சிம்லாவில் நாளை வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லா, ஃபதேபூர், இந்தோராஸ காங்கரா மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த 5 நாட்களுக்கு மலை பிரதேசங்களான இமாச்சல், உத்தரகாண்டில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலில் நீர் நிலைகளுக்கு அருகே உள்ள வீடுகள் சீட்டுக் கட்டு போல் சரிந்து நீரில் அடித்து செல்லப்படுகின்றன.












Click it and Unblock the Notifications