பால் தாக்கரேவை கொல்ல முயன்றது லஷ்கர் இ தொய்பா.. ஹெட்லி வாக்குமூலம்
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை கொல்ல லஷ்கர் இ தொய்பா முயற்சித்ததாக டேவிட் கோல்மேன் ஹெட்லி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டேவிட் ஹெட்லி, வீடியோ கான்பரன்சிங் மூலமாக மும்பை கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக குறுக்கு விசாரணை நடைபெற்றது. நான்கு நாட்கள் இது நடைபெறவுள்ளது.
இந்த குறுக்கு விசாரணையின்போது சிவசேனா தலைவரான மறைந்த பால் தாக்கரேவை கொல்லை லஷ்கர் அமைப்பு திட்டமிட்டதாக அவர் கூறினார். அவரது வாக்குமூலத்திலிருந்து:
பால் தாக்கரேவைக் கொல்ல லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டது. இதுறித்து நானும் கேள்விப்பட்டேன். ஆனால் அதுகுறித்த விவரம் எனக்குத் தெரியவில்லை.
இந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது. தாக்கரேவுக்கும் எதுவும் நேரிடவில்லை. தாக்கரேவைக் கொல்ல முயன்ற நபர் போலீஸ் பிடியில் சிக்கிக் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் பின்னர் தப்பி விட்டார் என்று கூறினார் ஹெட்லி.
ஹெட்லி முன்பு அளித்த வாக்குமூலத்திலும் கூட சிவசேனா குறித்துக் கூறியிருந்தார். அப்போது அவர் கூறுகையில், மும்பையில் உள்ள சிவசேனா பவனை உளவு பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். 2 முறை நான் அங்கு போயிருந்தேன். சஜித் மிர் கேட்டுக் கொண்டதால் சென்றேன். இருப்பினும் நான் கொடுத்த தகவல்களை பால் தாக்கரே விவகாரத்தில் அவர்கள் பயன்படுத்தி் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
மேலும் நான் ஒரு சிவசேனா நபருடன் நட்பு ஏற்படுத்திக் கொண்ட பின்னர்தான் சிவசேனா பவனுக்குச் சென்றேன். அவர் மூலமாகவே பல தகவல்களை நான் சேகரித்தேன் என்றார் ஹெட்லி.