அமித்ஷாவுடன் நின்ற பயங்கரவாதி.. பாஜகவில் என்ன வேலை? என்ஐஏ விசாரணை கோரி காங்கிரஸ் போராட்டம்
ஜம்மு: லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி பாஜகவில் பொறுப்பில் இருந்தது அம்பலமாகியுள்ள நிலையில் அது குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவரை நேற்று துக்சா கிராம மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.
ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதி! இத்தனை நாளாக பாஜக ஐடி விங்கில் நிர்வாகியாக செயல்பட்டது அம்பலம்
பாஜகவில் பயங்கரவாதி
கைது செய்யப்பட்ட பைசல் அஹமது மற்றும் தலிப் ஹுசைன் ஆகிய இருவரில் தலிப் ஹுசைன் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி என்பது தெரிய வந்திருக்கிறது. ரஜோரி பகுதியை சேர்ந்த தலிப் ஹுசைன், பாஜகவில் இணைந்து மூத்த தலைவர்கள் பலருடன் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு ஊடக அணி பொறுப்பாளராக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை
இதுகுறித்து அப்பகுதி பாஜக பிரமுகர்கள் கூறுகையில், ஆன்லைன் வாயிலாக பலர் கட்சி இணைவதால் அவர்களின் முழு பின்னணி தங்களுக்கு தெரியாமல் போவதாக கூறியுள்ளனர். ஆன்லைனில் இணைபவர்களின் பின்னணி குறித்து ஆராய்வதில்லை என்பதை அக்கட்சி நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர். இந்த தகவல் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் போராட்டம்
இந்த நிலையில் பயங்கரவாதி பாஜக கட்சியில் உறுப்பினராக இருந்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் ஹுசைன் ஆகியோரது புகைப்படங்களை பதாகைகளாக ஏந்தி நின்று அவர்கள் முழக்கங்களாஇ எழுப்பினர்.
என்.ஐ.ஏ. விசாரணை
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரவிந்தர் ஷர்மா, "பாஜக தலைவர்களுக்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹுசைனுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும். பயங்கரவாதி பாஜகவில் அங்கம் வகித்தது அமர்நாத் யாத்திரைக்கு மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் ஆபத்தானது. பாஜக தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்துவிட்டது." என்றார்.
பயங்கரவாதியுடன் அமித்ஷா
இது குறித்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ராமன் பல்லா கூறுகையில், "பாஜகவுக்கும் ஹுசைனுக்கும் இடையிலான தொடர்பையும், அதன் மூலம் அவர் செய்த காரியங்களையும் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும். கட்சியில் பயங்கரவாதிகள் இருந்தது குறித்து பாஜக விளக்கவேண்டும். பயங்கரவாதி ஹுசைன் அமித்ஷாவுடன் நிற்கும் புகைப்படமும் உள்ளது. உள்துறை அமைச்சர் ஏன் அமைதியாக இருக்கிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.