ஜல்லிக்கட்டு விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும்... ஆனால் உகந்த நேரம் இது இல்லை- உச்சநீதிமன்றம்!
டெல்லி: ஜல்லிக்கட்டில் காளைகளை ஈடுபடுத்த அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு விதித்த தடையை உடனே நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் ராமகிருஷ்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என். ராஜாராமன், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் இல்லத்தில் சென்று முறையீட்டு மனுவை விசாரணைக்கு அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

எனினும், ஜல்லிக்கட்டு விவகாரத்தை விசாரிக்கும் நீதிபதிகளிடம் முறையிடும்படி ராஜாராமனை தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வழக்கறிஞர் ராஜாராமன் ஆஜரானார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், "காளைகள் வதைபடுவதைத் தடுக்கும் வகையில், 2011 இல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணை மீது விரிவாக விசாரித்த பிறகே 2014 இல் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு பல்வேறு தகவல்களை மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதை நீதிமன்றம் வரவேற்கிறது. காளைகளை குடும்பத்தில் ஒருவராகவும் செல்லக் குழந்தையாகவும், தெய்வமாகவும் கருதுவதாகக் கூறினால், அதை எப்படி வேறு மாநிலத்துக்கு சம்பந்தப்பட்டவர்களால் விற்க முடிகிறது? மனுதாரர் தரப்பு வாதத்தின்படி புதிய சூழ்நிலைகளும், விதிகளும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமாக இருப்பதால், இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டிய அவசியத்தை நீதிமன்றம் உணருகிறது.
ஆனால், அதற்கு தற்போது உகந்த நேரம் கிடையாது. எனவே, ஜல்லிக்கட்டு தொடர்பான இடைக்காலத் தடை உத்தரவை நீக்க முடியாது. இப்போட்டிகள் தொடர்பாக ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெறும் போது, மனுதாரர் தரப்பு தனது வாதத்தை முன்வைக்க அனுமதி அளிக்கிறோம்" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications