ஜெயலலிதா சிறையில் வக்கீல்கள்.. 'அம்மா' உடல் நிலை சர்டிபிகேட்டை வாங்கி சென்றனர்
பெங்களூர்: உடல் நிலையை காரணம் காண்பித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்கப்பட்டுள்ள நிலையில், அவரது மருத்துவ சான்றுகளை பெங்களூர் சிறையில் இருந்து வக்கீல்கள் பெற்றுச் சென்றனர்.
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதாவுக்கு உடல் நிலை சரியில்லை என்பதை காரணம் காண்பித்து ஜாமீன் கேட்கப்பட்டுள்ளது.

எனவே, உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறும் ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியில் அவர் தரப்பு வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலைக்கு வந்த அவர் சார்பு வக்கீல்கள் இருவர், சிறைச்சாலை மருத்துவர்களிடமிருந்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்த ஆவணங்களை கேட்டுப் பெற்றனர். இதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரின் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன.
இந்த மருத்துவ சான்றில், ஜெயலலிதா உள்ளிட்ட தண்டனை பெற்ற நால்வரின், எடை, ரத்த அழுத்தம், சுகர் அளவு உள்ளிட்ட அம்சங்கள் இருந்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவ சான்றிதழ் பெற வந்த வக்கீல்கள், ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாக தெரிகிறது. ஜெயலலிதாவை அதிக தூரம் நடக்கவிடாமல் அவர் வக்கீல்களை சந்திக்க உரிய இடத்தை சிறை அதிகாரிகள் செய்து கொடுத்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சந்திப்பின்போது, வழக்கின் நிலை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications