கல்யாணத்திற்கு வந்த சிறுத்தையால் தலைதெறிக்க ஓடிய மாப்பிள்ளை – உ.பியில் கலகல!
மொராதாபாத்: கல்யாணம் என்றாலே தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலபேர் வருவார்கள்தான்.
ஆனால், உத்திர பிரதேசம் மொரதாபாத்தில் கல்யாணத்திற்கு அழையாத விருந்தாளியாக வந்த ஒருவரால் கல்யாண மண்டபமே கலகலத்துப் போய்விட்டது.
தக்கர்ட்வாராவில் ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, உள்ளே நுழைந்த சிறுத்தைப்புலி ஒன்று கல்யாணப் பந்தலை துவம்சம் செய்ய ஆரம்பித்தது.
மந்திரம் சொல்வதில் மும்முரமாக இருந்த மாப்பிள்ளை அப்போதுதான் சிறுத்தையைப் பார்த்தார். உடனடியாக சொந்தபந்தங்களைக் கூட்டிக் கொண்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்.
அதன்பிறகு, மணமகளின் சொந்தக்காரர்கள் சிறுத்தையை கட்டைகளாலும், கற்களாலும் பந்தலை விட்டு துரத்தி அடித்தனர். அதன்பிறகு மணமகனைத் தேடிக் கண்டுபிடித்து வந்து ஒருவழியாக தாலிக்கட்டி முடித்துள்ளார் கல்யாண மாப்பிள்ளை. அப்புறம்தான் மூச்சே வந்துள்ளது உறவினர்களுக்கு ஹையோ...ஹையோ!