மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வர மாட்டோம் என காங்கிரஸ் எழுதிக் கொடுக்க தயாரா? மோடி ஆவேசம்!
பனஸ்கந்தா: மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம் என எழுத்துப்பூர்வமாக அறிவிக்க தயாரா என காங்கிரஸ் கட்சிக்கும், இந்தியா கூட்டணிக்கும் சவால் விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. இதையடுத்து 2வது கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு: மூன்றாம் கட்டமாக வரும் மே 7ஆம் தேதி 94 லோக்சபா தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை இன்னும் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி ஒட்டுமொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தேர்தல் பிரச்சாரம் திவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை அகற்றிவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அதேசமயம், வாக்கு வங்கியை வலுப்படுத்த மதத்தின் அடிப்படையில் நேர்மையற்ற முறையில் இட ஒதுக்கீட்டை வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியின மற்றும் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவிடமாட்டேன் என பிரதமர் மோடி பேசி வருகிறார்.
மோடி பிரச்சாரம்: இந்நிலையில் குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "2014 லோக்சபா தேர்தலின்போது ஒரு டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்? என காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வந்தது. ஆனால், காங்கிரஸுக்கு தேர்தலில் சரியான பதிலடியை இந்த நாடு வழங்கியது.
2019ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை தக்க வைக்காது என எதிர்க்கட்சியினர் கூறினர். 2019ல் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து அமோக ஆதரவு தெரிவித்தனர். எனது மூன்றாவது பதவிக்காலத்தில் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
இந்த மோடி உயிருடன் இருக்கும் வரை: பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி மக்களுக்கு அரசியல் சாசனத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, அதை யாரும் பறிக்க முடியாது. பாஜக இருக்கும் வரை இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும். நரேந்திர மோடி உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற விளையாட்டை விளையாட விட மாட்டேன்.
காங்கிரஸ் கட்சிக்கு சவால்: இன்று, காங்கிரஸ் கட்சியின் இளவரசருக்கும், அவரது கட்சிக்கும் நான் சவால் விட விரும்புகிறேன். அரசியலைப்போடு விளையாடமாட்டோம் அல்லது மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கமாட்டோம் என அறிவிக்க வேண்டும். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
புதிய பொய்: ஒட்டுமொத்த மோடி மற்றும் ஓபிசி சமூகத்தினரையும் திருடர்கள் என்று அழைத்தார் காங்கிரஸ் இளவரசர். தற்போது 2024ல், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு முடிவுக்கு வரும் என்ற புதிய பொய்யை காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் பரப்பி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தொலைநோக்குப் பார்வையும் கிடையாது, நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கான ஆர்வமும் இல்லை. ஆனால், நாங்கள் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலன் மேம்பாட்டிற்காக புதிய திட்டங்களை கொண்டு வர உள்ளோம்" எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications