எல்ஐசி பங்குகளை விற்க வேண்டாம்.. தொடங்கியது ஊழியர்களின் நாடு தழுவிய போராட்டம்
டெல்லி: எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளதை கண்டித்து எல்ஐசி ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கியுள்ளன.
எல்ஐசியில் உள்ள பங்குகளில் ஒரு பகுதியை விற்கும் அரசின் திட்டத்திற்கு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கான அறிவிப்பை கடந்த 1-ஆம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு சந்தை பிரிவில் அதிக பங்கு வைத்திருப்பது எல்ஐசிதான். இத்தகைய எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்தால் இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என மக்கள் கருதுகின்றனர்.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் எல்ஐசி நிறைய பங்களிப்பை கொடுத்துள்ளது. எனவே இதன் பங்குகளை விற்பது தேசநலனுக்கு விரோதமானது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மத்திய அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள எல்ஐசியின் 2048 கிளைகள், 114 அலுவலகங்கள், 8 மண்டல அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எல்ஐசியின் வகுப்பு 1 அதிகாரிகள் சங்கம் கூட்டமைப்பு, இந்திய காப்பீட்டு தொழிலாளர்கள் தேசிய கூட்டமைப்பு, அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் ஆகிய 3 அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்ஐசியில் 90 சதவீத ஊழியர்கள் இந்த 3 அமைப்புகளிலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications