டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை
டெல்லி: டெல்லியில் நாளையோடு புதிய ஆட்சி அமைக்க காலக்கெடு முடிவடையும் நிலையில், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பரிந்துரைத்துள்ளார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை. பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை 2 இடங்களையும் பிடித்தனர்.
32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மேலும் 4 இடங்கள் தேவை. சுயேட்சைகள் தனது ஆதரவைத் தெரிவித்தாலும் கூட அது பாஜக ஆட்சியில் அமர போதுமானதாக இருக்காது. எனவே, அக்கட்சி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த இடத்தில் 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ ஆட்சி அமைக்க 18 நிபந்தனைகளை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு விதித்தது. மேலும், தங்களுக்கு 10 நாள் அவகாசமும் கேட்டது.
டெல்லியில் புதிய ஆட்சி அமைப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு நாளையோடு கெடு முடிவடையும் நிலையில் அதிரடியாக துணைநிலை ஆளுநர் உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் ஷிண்டே, சட்ட வல்லுனர்களிடம் கருத்து கேட்ட பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அடுத்த 2 நாட்களுக்குள் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராவிடில், டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது தொடர்பாக விரைவில் மத்திய அமைச்சரவைக் கூடி விவாதித்து குடியரசுத்தக்லைவருக்கு பரிந்துரை செய்யும்.












Click it and Unblock the Notifications