தீவிரவாத நடவடிக்கையை தடுக்க 1500 'ஜேம்ஸ்பாண்டுகளை' களமிறக்குகிறது இந்தியா!
டெல்லி: பிரிட்டன் வரிசையில், இந்தியாவும் தனது உளவுத்துறை பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, இங்கிலாந்து அரசு தனது உளவாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. உளவுத்துறையால் முன்கூட்டியே பாரீஸ் தாக்குதலை கணிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, பலத்தை அதிகரிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தின், MI5 மற்றும் MI6 உளவு அமைப்புகளுக்கும், GCHQ உளவு அமைப்புக்கும் ஆட்களை அதிகம் நியமிக்க உள்ளது இங்கிலாந்து. சுமார் 1900 பேர் புதிதாக உளவுத்துறையில் இணைவார்கள் என்று தெரிகிறது.
இதே நிலை இந்தியாவிலும் உள்ளது. இந்தியா தனது உளவாளிகள் எண்ணிக்கையை மேலும் சுமார் 1500 என்ற அளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு சில காரணங்கள் உள்ளன. ஆன்லைன் மூலமாக நடைபெறும், தீவிரவாத கருத்து பரிமாற்றங்களை கண்காணிப்பது தற்போதுள்ள உளவாளிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. அவர்கள் ஆயுத பயிற்சி, உளவு பயிற்சி பெற்றவர்கள் என்றபோதிலும், இணையதள விவகாரங்களில் பயிற்சி மற்றும் கல்வியறிவு இல்லாதவர்கள்.
எனவே, புதிய உளவாளிகள் பலரும் இணையத்தை தாராளமாக கையாளுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், தற்போதுள்ள கம்ப்யூட்டர், விவரம் தெரிந்த உளவாளிகள் அனைவரையும், அதே பணிக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு வேறு வேலைகளும் உள்ளன. எனவே, புதிதாக திறமைமிக்கவர்களை பணிக்கு அமர்த்தப்படுவது அசியமாகிறது.