இந்த ஆடியோவை கேளுங்களேன்: உங்களுக்கும் கண் கலங்கும்
மும்பை: 1986ம் ஆண்டு கராச்சிக்கு கடத்திச் செல்லப்பட்ட விமானத்தில் பயணிகளின் உயிரை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த பணிப்பெண் நீர்ஜா பனோட் கடைசியாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
1986ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய விமானத்தை 4 தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு கடத்திச் சென்றனர். கராச்சியில் விமானம் தரையிறங்கியதும் அதில் சிப்பந்தியாக இருந்த நீர்ஜா பனோட்(22) விமானி, துணை விமானி ஆகியோரை நைசாக தப்பியோட உதவினார். அவ்வாறு செய்ததால் தீவிரவாதிகள் விமானத்தை வேறு எங்கும் எடுத்துச் செல்ல முடியவில்லை.
தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் இருந்தும் 359 பயணிகளின் உயிரை காத்து அவர்களுக்காக தனது உயிரை கொடுத்தவர் நீர்ஜா. அவரின் துணிச்சலை பாராட்டி மத்திய அரசு அவரின் மறைவுக்கு பிறகு அவருக்கு உயரிய விருதான அசோக சக்ராவை வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் நீர்ஜாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ராம் மாத்வானி நீர்ஜா என்ற பெயரில் படம் எடுத்துள்ளார்.
படத்தில் நீர்ஜாவாக சோனம் கபூர் நடித்துள்ளார். படம் வரும் 19ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தும் முன்பு நீர்ஜா பயணிகளை வரவேற்று அறிவிப்பு வெளியிட்ட ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில் நீர்ஜாவின் குரலை கேட்கையில் கண் கலங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications