லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற மோடியை விட காங்கிரஸ் தான் அதிகம் உதவி: அத்வானி
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற மோடியை விட காங்கிரஸ் தான் அதிகம் உதவி செய்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி டெல்லியில் உள்ள தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் கடந்த 1952ம் ஆண்டில் இருந்து நடந்து வரும் தேர்தல்களை பார்த்து வருகிறேன். 2014ம் ஆண்டு தேர்தல் முடிந்த பிறகு இது முன்பு எப்பொழுதும் இல்லாத தேர்தல் என்று தோன்றியது. பின்னர் தேர்தல் முடிவுகளை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த தேர்தலின்போது கட்சியினர் கடுமையாக உழைத்தனர்.
ஆனால் எங்கள் கட்சி அமோக வெற்றி பெற எதிர்க்கட்சி தான் காரணம். அவர்கள் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் தவறுகள் மற்றும் ஊழல்கள் செய்யாவிட்டால் எங்களுக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்காது.
நரேந்திர மோடி தலைமையில் வெற்றிக்காக பாடுபட்டனர். ஆனால் அவர்களை விட எதிர்கட்சி தான் பெரும் உதவி செய்துள்ளது.
வெளிநாட்டுக்காரர்கள் நம் ரயில் தண்டவாளங்களில் மக்கள் காலைக் கடன்களை கழிப்பதை பார்த்தால் நன்றாக இருக்காது, அதனால் பொது இடத்தில் மலம் கழிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் என் தொகுதியில் கூறினேன். அனைத்து வீடுகள் மற்றும் பள்ளிகளில் கழிப்பறைகள் இருக்க வேண்டும் என்றார்.