கையில் குழந்தை.. மறுகையில் சூட்கேஸ்.. தன்னம்பிக்கையுடன் தளர்வில்லாத நடை போடும் பெண்.. வைரல் போட்டோ
1200 கிமீ தூரம் நடந்தே வரும் புலம்பெயர் பெண் தொழிலாளியின் வீடியோ வைரலாகிறது
சூரத்: ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ்.. முகமெல்லாம் சோகம், விரக்தி அப்பிக்கிடக்க.. நடந்து கொண்டே இருக்கிறார் புலம்பெயர்ந்த பெண் தொழிலாளி ஒருவர்!!! இதை ஒருவர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட, காண்போர் கண்கலங்கி விடுகின்றனர்!
Recommended Video
லாக்டவுன் 3வது முறையாக போய் கொண்டிருக்கிறது.. முதல்முறை லாக்டவுன் திட்டமிடப்படாமல் அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியும், குழப்பமும், இன்னலும் இன்னமும் அடங்கவில்லை.
பின்னர் வந்த 2வது லாக்டவுனும் பலன் தரவில்லை. இதனால் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக, கூட்டம் கூட்டமாக, ஊர் ஊராக என புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு கிளம்பினர்.. நடக்க முடியாமல் நடந்தனர்.. சோர்வில் தளர்ந்து மயங்கி விழுந்தனர்.. குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் பெற்றோரின் தோளிலும், மார்பிலும் கண்மூடி கிடந்தனர்.

தொழிலாளர்கள்
இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது என்றாலும், அன்று புலம்பெயர்ந்து நடந்து சென்றபோது பசி, மாரடைப்பால் மரணத்தை தழுவிய எத்தனையோ பேர்களுக்கு எதுவுமே தீர்வாக இருந்துவிட முடியாது!

கையில் சூட்கேஸ்
இப்போதும் ஒரு பெண் நடந்து செல்கிறார்.. அந்த பெண்ணுக்கு போக்குவரத்து வசதி இல்லை.. கைக்குழந்தையை தூக்கி சுமந்தவாறு, இன்னொரு கையில் சூட்கேஸை எடுத்து சொந்த ஊர் செல்கிறார்.. குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நோக்கி இந்த பெண் தொழிலாளி சென்று கொண்டிருக்கிறார்.. கடுமையான அவதியுடன் பெண் நடந்து செல்வதை பார்த்த இன்னொரு புலம்பெயர் தொழிலாளி தன்னுடைய செல்போனில் இதை வீடியோவாக எடுத்து ஷேர் செய்துள்ளார்.

இரவு - பகல்
இந்த பெண் 1,200 கிமீ நடந்தே சென்று கொண்டிருக்கிறார்.. சூரத் - பிரயாக்ராஜ் இடையேயான 1,200 கிமீ தொலைவை நடந்தே கடக்க வேண்டும் என்றால் எப்படியும் 10 நாட்களாவது ஆகுமாம்.. கைக்குழந்தையை இவ்வளவு தூரம் இவர் எப்படி தூக்கி வந்திருப்பார், இந்த 10 நாட்கள் பகல், இரவுகளில் அவர் என்னென்ன இடர்கள், தொந்தரவுகளை சந்தித்திருப்பார்? ஊரடங்கில் சாப்பாட்டுக்கு என்ன செய்திருப்பார்? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

போக்குவரத்து வசதி
கைக்குழந்தை உள்ளதால் அந்த பெண் பாதுகாப்புக்காக மாஸ்க் அணிந்திருக்கிறார். ஆனால் முழு சோர்வாக காணப்படுகிறார். இந்த வீடியோ சோஷியல் மீடியாவிலும் பரவி வருகிறது.. சொந்த ஊர் செல்லலாம் என்று அனுமதி தந்தாலும், இவர்களுக்கு முறையான போக்குவரத்து வசதி உள்ளதா என்பதையும் அரசு கண்காணித்தால் நல்லா இருக்குமே என்பதுதான் அனைவரின் கோரிக்கையும்!












Click it and Unblock the Notifications