பிசிசிஐ நிர்வாகிகள் அனைவரையும் தூக்கி எறிங்க... லோதா கமிட்டி அதிரடி பரிந்துரை!
டெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் இன்று லோதா கமிட்டி ஒரு பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது. அந்த பரிந்துரையில், "பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையை சிறப்பு பார்வையாளராக பிசிசிஐ நியமிக்க வேண்டும் எனவும் அதிரடி பரிந்துரையை முன் வைத்துள்ளது லோதா கமிட்டி.
பிசிசிஐயின் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் முன்னாள் நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு அளிக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரைகளை சமீபத்தில் அளித்தது.

ஆனால், இந்த பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பு தெரிவிப்பதாக பிசிசிஐ மீது குற்றம் சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு அறிக்கை அளித்தது. இந்த நிலையில்,இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்தது பிசிசிஐ.
சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. லோதா கமிட்டி சார்பில் கோபால் சுப்பிரமணியம் வாதிட்டு வருகிறார். பிசிசிஐ சுப்ரீம்கோர்ட்டை எதிர்த்து நிற்கிறது என்று கடுமையான குற்றச்சாட்டை அவர் தனது வாதங்களின்போது முன் வைத்திருந்தார்.
லோதா கமிட்டியின் பல்வேறு பரிந்துரைகளை பிசிசிஐ தனது வாக்கெடுப்பு மூலம் தள்ளுபடி செய்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழ்ககம்போல நிதி பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நிதி பரிமாற்றத்தில் புது கொள்கை கொண்டுவர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையிலும், அதை பிசிசிஐ மதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
பிசிசிஐ சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், சீனியர் வக்கீலுமான கபில் சிபல் ஆஜராகி வருகிறார். மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ வழங்கியுள்ள 400 கோடி ரூபாய் வழக்கமான பரிவர்த்தனைதான். லோதா கமிட்டி வழக்கறிஞர் குற்றம்சாட்டுவதை போன்று, லோதா கமிட்டிக்கு எதிராக வாக்களிக்க வழங்கப்பட்ட லஞ்சப் பணம் கிடையாது என்று கபில் சிபல் வாதிட்டிருந்தார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று லோதா கமிட்டி ஒரு பரிந்துரையை தாக்கல் செய்துள்ளது. அந்த பரிந்துரையில், "பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளையை சிறப்பு பார்வையாளராக பிசிசிஐ நியமிக்க வேண்டும் எனவும் அதிரடி பரிந்துரையை முன் வைத்துள்ளது லோதா கமிட்டி.
இந்த பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்குமானால் பிசிசிஐ முழுமையாக கலைக்கப்பட வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications