எங்களைக் கேட்காமல் கூட்டத் தொடரை நீட்டிப்பதா ?... லோக்சபாவில் வரிந்து கட்டிய எதிர்கட்சிகள்....
டெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரை மேலும் 3 நாட்கள் நீட்டித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
லோக்சபா இன்று காலை தொடங்கியதும், கூட்ட நாள் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
தங்களை கலந்தாலோசிக்காமல் கூட்டத் தொடரை மேலும் 3 நாட்கள் நீட்டித்ததைக் கண்டித்த எதிர்கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசின் சர்வாதிகார போக்கை ஏற்க முடியாது என முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இந்த விவகாரத்தில் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார். மேலும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து இது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை இரு முறை ஒத்தி வைக்க நேரிட்டது.
இதே போன்று தனியார் நிதி நிறுவனத்திற்கு கடன் நீட்டிக்கட்ட விவகாரத்தில் மத்திய தணிக்கைத் துறையால் குற்றம்சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலகக் கோரி மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து அவை பல முறை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications