Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛ராமர் கோவில் டூ இடஒதுக்கீடு வரை’’.. உ.பி.யில் பாஜக திடீரென சறுக்கியது ஏன்? 5 மேஜர் காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வென்றால் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்பது தான் இந்திய வரலாறு. அதன்படி கடந்த 2014, 2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தை ஸ்வீப் செய்த பாஜகவுக்கு இந்த முறை பெரிய அடி விழுந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் சறுக்கியதன் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:

நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் 1 முதல் ஜுன் 1ம் தேதி வரை லோக்சபா தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ரிசல்ட் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் இடியாக அமைந்தது.

uttar pradesh bjp lok sabha election 2024 yogi adiyanath 2024

அதோடு, எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணிக்கு பெரும் ஏற்றமாக இந்த ரிசல்ட் அமைந்துள்ளது. ஏனென்றால் மத்தியில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேவேளையில் பாஜகவுக்கு நிகராக ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதாவது மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ன. இதில் மத்தியில் தனித்து ஆட்சியை பிடிக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளின் வெற்றியை சேர்த்தால் பாஜகவுக்கு மொத்தம் 293 இடங்கள் உள்ளன. இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் அதிகபட்சமாக 99 இடங்களில் வென்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 37 தொகுதியிலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், முதல்வர் ஸ்டாலின் திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக ‛இந்தியா' கூட்டணி கட்சிக்கு மொத்தம் 234 இடங்கள் உள்ளன.

கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தல்களில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் கூட தனித்து ஆட்சி அமைப்பதற்கான தனி மெஜாரிட்டியை பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை நிலைமை அப்படியில்லை. பாஜகவின் இந்த சரிவுக்கு முக்கிய காரணம் என்பது உத்தர பிரதேசம் தான். ஏனென்றால் உத்தர பிரதேசத்தில் தான் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்கு வெல்லும் கட்சியால் எளிதாக ஆட்சியை பிடிக்கலாம். உதாரணமாக கடந்த 2014ல் உத்தர பிரதேசத்தில் பாஜக 71 இடங்களிலும், 2019ல் பாஜக 62 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மாறாக ‛இந்தியா' கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வதி அதிகபட்சமாக 37 இடங்களில் வென்றுள்ளது. இது பாஜகவை விட அதிகமாகும். அதேபோல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மட்டும் பாஜக கடந்த முறையை விட 29 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது. இந்த 29 தொகுதிகள் இருந்தால் பாஜகவால் மத்தியில் தனிமெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட மெஜாரிட்டிக்கான 3 இடங்கள் மட்டுமே குறைவாக இருந்திருக்கும். இந்நிலையில் தான் கடந்த 2 முறை தொடர்ந்து உத்தர பிரதேச சட்டசபையில் வென்றது, அயோத்தி ராமர் கோவில் கட்டியது உள்ளிட்டவற்றால் உத்தர பிரதேச மக்கள் பாஜகவுக்கு கைக்கொடுப்பார்கள் என்ற நிலையில் அவர்கள் பாஜகவை கைகழுவி உள்ளனர். இந்நிலைலயில் தான் உத்தர பிரதேசத்தில் பாஜகவின் சறுக்கலின் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதன் முக்கிய விபரம் வருமாறு:

முதல் காரணம்: உத்தர பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் உள்ளனர். சிறுபான்மையினரை பொறுத்தமட்டில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளனர். இவர்கள் மொத்தமாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தான் தலித் மக்களின் உரிமைக்காக கட்சி நடத்தி வரும் மாயாவதி ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. இது பாஜகவுக்கு பெருத்த அடியாக அமைந்தது. இந்த தரப்பு மக்களின் ஆதரவை எப்படி அகிலேஷ் யாதவ் பெற்றார் என்று பார்த்தால் அதன் பின்னணியில் முக்கிய மேட்டர் உள்ளது. பாஜகவுக்கு 400 இடங்களை வழங்கினால் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடும். இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிடும் என மேடைக்கு மேடை அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முழங்கினார். இந்த அச்சத்தில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள் ‛இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்து உள்ளதாக கூறப்படுகிறது.

2வது காரணம்: உத்தர பிரதேசத்தில் ஏராளமான கிராமங்களில் உள்ள மக்கள் பெரும் ஏழைகளாக உள்ளனர். அன்றாடம் கூலி தொழில் செய்தே பிழைப்பு நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் வேறு மாநிலங்களில் வேலை தேடி புலம் பெயர் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு விலைவாசி உயர்வு என்பது பெரும் பிரச்சனையாக மாறியது. குறிப்பாக சிலிண்டர் விலை உயர்வு பிரச்சனையாக மாறியது. அதோடு உத்தர பிரதேசத்தில் பாஜக 2வது முறையாகவும், மத்தியில் 10 ஆண்டு பாஜக ஆட்சியில் இருந்தாலும் கூட இன்னும் பல கிராமங்களில் வேலைவாய்ப்பு பிரச்சனை என்பது உள்ளது. இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். இத்தகயை சூழலில் தான் ‛இந்தியா' கூட்டணி சார்பில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். ‛இந்தியா' கூட்டணி அமைந்தவுடன் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என பிரசாரம் செய்யப்பட்டது. இதனை இளைஞர்கள், படித்த பட்டதாரிகள் நம்பி பாஜகவுக்கு பதில் ‛இந்தியா' கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

3வது காரணம்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி உத்தர பிரதேசத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.8,500 என்ற வகையில் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது உத்தர பிரதேசத்தில் பட்டித்தொட்டி எங்கும் காட்டுத்தீ போல பரவியது. அதோடு பெண்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. பெண்கள் மொத்தமாக காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ‛சமாஜ்வாதி' கட்சிக்கு ஓட்டளித்துள்ளனர்.

4வது காரணம்: உத்தர பிரதேச மாநிலம் என்றால் அயோத்தி ராமர் கோவிலை யாரும் மறக்க முடியாது. ஏனென்றால் இந்த அயோத்தி ராமர் கோவில் விவகாரம் என்பது 500 ஆண்டு வரலாற்றை கொண்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை தொடர்ந்து பாஜக கூறி வந்தது. இது உத்தர பிரதேசத்தில் பாஜகவை வலுவாக்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கடந்த 2019ல் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி ஜனவரி 22ல் பிரதிஷ்டையும் செய்து திறந்து வைத்தார். இதனால் அயோத்தி ராமர் கோவில் விவகாரம் அமைதியானது. ராமர் கோவில் கட்டியதால் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என பாஜக நினைத்த நிலையில் ராமர் கோவில் விவகாரம் இந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதோடு அயோத்தி ராமர் கோவிலை ‛இந்தியா' கூட்டணியினர் இடிப்பார்கள் என்ற பாஜக பிரசார பேச்சையும் மக்கள் பொருட்படுத்தவில்லை.

5வது காரணம்: மத்தியில் ஆட்சியை பிடிப்பது அல்லது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை அரியணையில் இருந்து இறக்க வேண்டும் என்றால் உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்தில் கண்டிப்பாக கணிசமான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடக்கம் முதலே புரிந்து வைத்திருந்தது. இதனால் தான் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட தொடங்கியது.தொகுதி பங்கீட்டின்போது கூட காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை அகிலேஷ் யாதவ் கொடுக்க மறுத்தார். ஆனாலும் காங்கிரஸ் அதனை பொருட்படுத்தாமல் 17 தொகுதிகளில் மட்டுமே களமிறங்கியது. மீதமுள்ள 63 தொகுதிகளில் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டார். குறைந்த தொகுதிகள் ஒதுக்கினாலும் கூட காங்கிரஸ் தலைவர்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியுடன் இணக்கமாக செயல்பட்டனர். இதன்மூலம் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி பாதிக்கு மேலாக 43 இடங்களில் வாகை சூடியுள்ளது. இதுவும் பாஜகவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+