உச்சநீதிமன்ற, ஹைகோர்ட் நீதிபதிகளை தேர்வு செய்யும் நடைமுறையில் மாற்றம்! முக்கிய சட்டம் நிறைவேற்றம்
டெல்லி: உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் தற்போதுள்ள தேர்வு முறையை மாற்றிவிட்டு கமிஷன் மூலமாக நீதிபதிகளை தேர்வு செய்ய வகை செய்யும் சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் , உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமிக்க தற்போது நீதிபதிகள் தேர்வு குழு (கொலிஜியம்) நடைமுறை உள்ளது. இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிக அதிகாரம் உண்டு.
இந்த நடைமுறையில் மாற்றம் செய்து, கமிஷன் மூலமாக நீதிபதிகளை நியமிக்க வகை செய்யும் 'தேசிய நீதிபதி நியமன கமிஷன் சட்டம்-2014' லோக்சபாவில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது. உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க 6 பேர் கொண்ட கமிஷனை அமைக்க இந்த மசோதா வழி வகை செய்கிறது.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் "நீதித்துறையின் சுதந்திரத்தில் இந்த சட்டம் எந்த வகையான பாதிப்பையும் ஏற்படுத்தாது. நீதிபதிகளை நியமிக்கும் முன்பு, அதிகப்படியான ஆலோசனைகள் மேற்கொள்ள கமிஷனால் முடியும். தற்போதுள்ள கொலிஜியம் முறையில், திறமையான பல நீதிபதிகள் ஹைகோர்ட், உச்சநீதிமன்றத்தில் கால் வைக்க முடியாத நிலை உள்ளது.
புதிய கமிஷன் இந்த குறைபாட்டை நீக்கும் வகையில் நன்கு ஆலோசித்து திறமையான, அனுபவம்மிக்க நீதிபதிகளை நியமிக்கும்" என்றார். இந்த சட்டத்திற்கு 367 உறுப்பினர்கள் ஆதரவு அளித்த நிலையில், யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே ஒருமனதாக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, அரசியலமைப்பு 121 வது திருத்த மசோதாவும் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications