நில முறைகேடு புகாரில் உண்மையுள்ளது.. சிஐடி அறிக்கையால் எடியூரப்பா, குமாரசாமிக்கு சிக்கல்!
பெங்களூர்: நில முறைகேட்டில் கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா மற்றும் குமாரசாமி ஆகியோர் ஈடுபட்டது உண்மைதான் என்பதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக மாநில சிஐடி போலீஸ் லோக்ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. எனவே எந்த நேரத்திலும் இவ்விருவர் மீதும் லோக்ஆயுக்தா எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வாய்ப்பு உருவாகியுள்ளது.
மஜத-பாஜக கூட்டணி ஆட்சியில் குமாராசமி முதல்வராக பதவி வகித்தார். நடுவில் பாஜக ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பாஜக தனிப்பெரும்பானையுடன் ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதல்வரானார்.

ஆனால் இவ்விரு முதல்வர்கள் காலத்தில், கர்நாடகாவில் மொத்தம் 610 ஏக்கர் நிலங்கள் டி-நோடிபை செய்யப்பட்டதாக லோக்ஆயுக்தா லஞ்ச ஒழிப்பு அமைப்பிடம் சமீபகாலமாக புகார்கள் குவிந்தன. ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையும் இதை சுட்டிக்காட்டியது.
எனவே, இதுகுறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி அறிக்கையளிக்கும்படி சிஐடி போலீசாருக்கு லோக்ஆயுக்தா நீதிபதி பாஸ்கர் ராவ் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய சிஐடி தற்போது லோக்ஆயுக்தாவுக்கு அளித்துள்ள அறிக்கையில் தவறுகளுக்கான பூர்வாங்க ஆதாரம் உள்ளதாக கூறியுள்ளது. எனவே விரைவில் லோக்ஆயுக்தா எப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து இரு மாஜி முதல்வர்களும் கைதானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
அடுத்தவாரம் பெல்காமில், மாநில சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிநோடிபை என்றால் என்ன?
குடியிருப்புகள் அமைக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, சாலை, மேம்பாலம் அமைக்கவோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்துக்காகவோ, தனியார் நிலங்களை அரசு கையகப்படுத்துவது வழக்கம். இதற்காக அரசு ஒரு விலையை நிர்ணயம் செய்து நிலத்தை கொள்முதல் செய்யும்.
அரசின் வழிகாட்டு மதிப்பின்படி நிலத்துக்கு விலை அளிக்கப்படும். ஆனால், இது சந்தை மதிப்பைவிட குறைவானதாகவே இருக்கும். எனவே, முதல்வருக்கு வேண்டப்பட்டவர்கள், யாருடைய நிலமாவது அரசால் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அதை விடுவிக்குமாறு அவர்கள் கேட்டுக்கொள்ள வாய்ப்புள்ளது.
ஏனெனில், அரசு தனது நோடிபிகேஷன் பட்டியலில் இருந்து அந்த நிலத்தை விடுவித்தால், கூடுதல் விலைக்கு நிலத்தை விற்பனை செய்ய நில உரிமையாளருக்கு வாய்ப்பு கிடைக்கும். அல்லது, மேலும் பல ஆண்டுகள் கழித்து இன்னும் அதிக விலைக்கு நிலத்தை விற்பனை செய்ய முடியும். இதுபோல டிநோடிபை செய்ய முதல்வருக்குதான் அதிகாரம் உள்ளது.












Click it and Unblock the Notifications