ஜல்லிக்கட்டில் கருப்பு பணம் புழங்குகிறது: தடை நீக்கிய கோபத்தில் ஜெய்ராம் ரமேஷ் தடுமாற்ற பேட்டி
டெல்லி: ஜல்லிக்கட்டு விளையாட்டில் கருப்பு பணம் புழங்குவதாகவும், மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுதான், சிங்கம், சிறுத்தை உள்ளிட்டவற்றோடு சேர்த்து, காளையையும் வித்தைகாட்டும், விலங்குகள் பட்டியலில் சேர்த்தார். இதனால் ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை.

தற்போது ஜல்லிக்கட்டுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், சிஎன்என்-ஐபிஎன் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
ஜல்லிக்கட்டிற்கு தடை கோரி பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு, பாரம்பரியம் மட்டுமே காரணமில்லை. கறுப்பு பணமும் அந்த விளையாட்டில் கலந்திருப்பதுதான், இதற்கு ஆதரவான குரல்கள் ஒலிக்க காரணம். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
அதேநேரம், தமிழ் கலாச்சார ஆர்வலர்களோ, என்ஜிஓக்களுடன் சேர்ந்துகொண்டு தமிழக நாட்டு மாடுகளை ஒழிக்க நடைபெறும் பன்னாட்டு முயற்சிதான், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை என்று கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications