தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக வந்து, கர்நாடகாவை கலக்கிய லாட்டரி மன்னன் பாரிராஜன்!
பெங்களூர்: காவல்துறையை கைக்குள் போட்டுக்கொண்டு கர்நாடகாவில் சட்ட விரோத ஒற்றை இலக்க லாட்டரி விற்பனையை நடத்தி கலக்கி கைதாகியுள்ள பாரிராஜன் ஒரு தமிழராகும்.
ஏழைகள் வாழ்க்கையை பாதிப்பதாக கூறி, பாஜக-மஜத கூட்டணி ஆட்சியின்போது, 2007ம் ஆண்டு, கர்நாடகாவில் லாட்டரி விற்பனையை தடை செய்தது.
ஆனால் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையை சில ருசி கண்ட பூனைகள் நடத்தி வந்தன. அதில் முக்கியமானவர் பாரிராஜன் (56). கோலார் மாவட்டம், பங்காருபேட்டையை சேர்ந்த இவர் அந்த மாவட்டத்தில் சகட்டு மேனிக்கு தனது பிசினசை தடையின்றி நடத்தி வந்தார்.

சேனல் ஸ்டிங்
இந்நிலையில்தான், கன்னட செய்தி சேனலான சுவர்னா நியூஸ், ஸ்டிங் ஆபரேசன் நடத்தி, கோலார் மாவட்டத்தில் ஏழைகள், லாட்டரி விற்பனையால் பாதிக்கப்படுவதை அம்பலப்படுத்தியது. இதையடுத்து சித்தராமையா அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிஐடி நடத்திய விசாரணையில், பாரிராஜனுக்கு உள்ள தொடர்பு அம்பலமானது. அவருக்கு உதவிகரமாக இருந்த போலீஸ் அதிகாரிகள் பெயரையும் சிஐடி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கூலி வேலைக்கு வந்தவர்
இத்தனைக்கும், இந்த பாரிராஜனின் தந்தை, ஒரு கூலியாக கோலார் தங்க வயலில் வேலை பார்த்தவர். தமிழகத்தில் இருந்து தங்கவயலில் வேலை பார்க்க அவரது தந்தை கோலார் வந்துள்ளார். பாரிராஜன் சிறுவயது முதல் கோலார் மாவட்டத்திலேதான் வாழ்க்கை நடத்தினார். பாரிராஜன் தனது 30வது வயதில் கோலார் நகரில் இயங்கி வந்த மொத்த லாட்டரி நிறுவத்தில் பிஆர்ஓவாக வேலை பார்த்துள்ளார். போலீசாருக்கு மாமூல் கொடுப்பதுதான் இந்த வேலையின் நோக்கமே. இப்படித்தான், கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையில் பாரிராஜனுக்கு பழக்கமானது. இது போகப்போக ஐபிஎஸ் அதிகாரிகள் வரையில் பரவியது.

தகதக பாரிராஜன்
அரசு லாட்டரி விற்பனையை தடை செய்தாலும், பாரிராஜனின் போலீஸ் தொடர்பு அவருக்கு கள்ள லாட்டரி விற்பனை செய்ய பெரிதும் உதவிகரமாக இருந்துள்ளது. சில குறிப்பிட்ட கோடிகளை, காவல்துறைக்கு லஞ்சம் கொடுக்கவே செலவிட்டதாக கூறுகிறது சிஐடி அறிக்கை.
பிழைக்க வந்த இடத்தில், பெரும் பணக்காரராகிவிட்டார் பாரிராஜன். வலது கையில் இரு பிரேஸ்லெட்டும், இடது கையில் கோல்டு வாட்சும், கழுத்தில் இரு செயினும் அணிந்தபடிதான் எப்போதும் காட்சியளிப்பாராம் பாரிராஜன்.

கைது
பங்காருபேட்டை ஆண்டர்சன்பேட்டையில் தங்கவயல் தொழிலாளர்கள் வசித்த இடத்தில் இருந்து பணக்காரர்கள் வசிக்கும் பாரத்நகர் பகுதிக்கு குடியேறிய பாரிராஜனுக்கு, 22 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாம். இந்நிலையில், பாரிராஜன் நேற்று பங்காருப்பேட்டையில் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலிப்பதாக அவர் கூறியதை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications