அடடே.. ஒரே நேரத்தில் சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் தேர்தல் நடத்த.. தம்பிதுரையும் ஆதரவு!
சட்டசபை, நாடாளுமன்றத்திற்கு ஒரே தேர்தல் நடத்தும் முடிவை ஆதரிப்பதாக மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி : 2019ம் ஆண்டு முதலே சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தேர்தல் செலவைக் குறைக்கும் வகையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்ற கருத்து பரவலாக இருக்கிறது. மத்திய அரசும் இந்த முடிவிற்கு பச்சைக்கொடி காட்டி தேர்தல் கமிஷனின் கருத்தை கேட்டுள்ளது.
அதேசமயம், இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பாஜக தரப்பில் நெருக்கடி தரப்படுவதாகவும் ஒரு சர்ச்சை உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு உடனடி ரியாக்ஷனை அதிமுக காட்டியுள்ளது.
மோடிக்கு தம்பித்துரை கடிதம்
இந்நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முடிவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.
2019ல் அமல்படுத்தக் கோரிக்கை
மேலும் 2019ம் ஆண்டு முதலே இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவைப் பொருத்த வரையில் தேர்தல் நடத்த பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கமே சரியான நேரமாக இருக்கும் என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
மழை, வெயில், தேர்வு கிடையாதாம்
இந்த காலகட்டத்தில் பள்ளிகளில் தேர்வு கிடையாது, கோடை காலம் வெப்பம் இருக்காது, மேலும் மழையும் இருக்காது. எனவே 2019 பிப்ரவரி இறுதி அல்லது 2019 மார்ச் மாத தொடக்கத்தை தேர்தலுக்கான கால அட்டவணையாக அறிவிக்க வேண்டும் என்று தம்பிதுரை கேட்டுக் கொண்டுள்ளார்.
20 மாநிலத் தேர்தல் நடத்தலாம்
முதற்கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலோடு 20 மாநிலத் தேர்தலை நடத்துவதன் மூலம் தேர்தலுக்காக செலவாகும் பணம் குறையும். மேலும் அரசு இந்தத் தொகையை மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்த முடியும் என்றும் தம்பிதுரை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.