5வது கட்ட லோக்சபா தேர்தல்: 15 மாநிலங்களில் 122 தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்வு!!
டெல்லி: 5வது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் 122 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
நாட்டின் 16வது லோக்சபாவுக்கான தேர்தல் ஏப்ரல் 7ந் தேதி முதல் மே 12ந் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரையில் 4 கட்டங்களாக நடந்த தேர்தலில் 112 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.
வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 431 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
5வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் 122 தொகுதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 12 மாநிலங்களில் இத்தொகுதிகள் உள்ளன.
அசாமில் 6 தொகுதிகளிலும் பீகார், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா 7 தொகுதிகளிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியிலும், ஜார்கண்டில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 19 தொகுதிகளிலும், மணிப்பூரில் ஒரு தொகுதியிலும், ஒடிசாவில் 11 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 20 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.