பாஜக வெற்றிக்கு உதவும் காங்கிரஸுக்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும்: அத்வானி கிண்டல்
டெல்லி: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிக்கு வழி வகை செய்யும் வகையில் ஊழல் ஆட்சி நடத்தியதற்காக காங்கிரஸ் கட்சிக்கு பாஜக நன்றி தெரிவித்துக் கொள்வதாக தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பாஜக மூத்தத் தலைவரான அத்வானி.
இது தொடர்பாக தனது வலைதளப் பக்கத்தில் அத்வானி எழுதியுள்ளதாவது :-
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் அளவுக்கு, இதற்கு முன் எந்த அரசிலும் ஊழல் நடந்ததில்லை. இந்த அரசில் ஊழல் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த அரசை கூடிய விரைவில் தூக்கி எறிய மக்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். கடந்த 1952ம் ஆண்டிலிருந்து அனைத்து பொதுத் தேர்தல்களிலும் நான் பங்கு எடுத்துள்ளேன். காங்கிரஸ் தோல்வி நிச்சயம் என்ற நிலை இப்போது இருப்பது போல் இதற்கு முன் எந்த தேர்தலிலும் இருந்ததில்லை.

சோனியா-மன்மோகன் சிங் அரசின் செயல்பாடுகளை கடந்த 2004ம் ஆண்டிலிருந்து கவனித்து வருகிறேன். 2014ல் பா.ஜ தலைமையிலான அரசு நிச்சயம் ஆட்சிக்கு வரும் வகையில் இருவரும் சரியாக செயல்படுகின்றனர். அதற்காக நாம் சோனியாவுக்கும், மன்மோகன் சிங்குக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என நான் என் சக தலைவர்களிடம் கூறி வருகிறேன்.
பா.ஜ கட்சியின் மேம்பாட்டுக்கு தீன்தயாள் உபாத்யாயா, நானாஜி தேஸ்முக், வாஜ்பாய், குஷாபாவ் தாக்ரே போன்ற தலைவர்கள் முன்மாதிரியாக இருந்தார்கள். வாஜ்பாய் பல சாதனைகள் படைத்தாலும், அவரிடம் தற்பெருமை, கர்வம் கிடையாது. இதுவரை இருந்த பிரதமர்களில், வாஜ்பாய் மிகச் சிறந்தவர்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications