பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியரின் மகன், மனைவி ரயில் முன்பு குதித்து தற்கொலை
டெல்லி: பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் சந்தோஷ் ஆனந்தின் மகன் பேராசிரியர் சங்கல்ப் ஆனந்த் தனது மனைவியுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர் சந்தோஷ் ஆனந்த். அவரது மகன் சங்கல்ப் ஆனந்த்(38) டெல்லியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியராக இருந்தார். அவர் தனது மனைவி நந்தினி(34) மற்றும் மகள் ரிதிமா(7) ஆகியோருடன் டெல்லியில் உள்ள சுக்தேவ் விகார் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி அவர் தனது ஃபோக்ஸ்வேகன் காரில் மனைவி மற்றும் மகளுடன் கோசிகலான் சென்றார். அங்கு காரை நிறுத்துவிட்டு ரயில் தண்டவாளத்திற்கு சென்றனர்.
ரயில் வரும் நேரமாகிறது அங்கு செல்லாதீர்கள் என்று ரயில்வே ஊழியர் ஒருவர் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். சங்கல்ப், நந்தினி ஆகியோர் ஆக்ரா-டெல்லி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மகளை மட்டும் ரயில் வருகையில் தண்டவாளத்திற்கு வெளியே தள்ளிவிட்டனர். இதில் சிறுமி காயங்களுடன் பிழைத்துக் கொண்டார்.
அவர்களின் உடல்களில் இருந்து 2 செல்போன்கள், ரூ.65 ஆயிரம் ரொக்கம், 10 பக்கம் கொண்ட கடிதம் ஆகியவை எடுக்கப்பட்டன. நிதி பிரச்சனையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களின் உடல்கள் சந்தோஷ் ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.