சோனமுத்தா சோலிமுடிஞ்சா? ம.பி.யில் பாஜகவுக்கு செம்ம சாவு பயம் காட்டும் சர்வேக்கள்- பீதியில் டெல்லி!
போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக ஆட்சியை பறிகொடுத்து படுதோல்வியை சந்திக்கும் என்கின்றன. ம.பி. தேர்தல் தொடர்பான ஒரு சர்வே கூட தங்களுக்கு சாதகமானதாக இல்லாததால் டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறதாம்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள். இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 116. இதர கட்சிகள் துணையுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. மத்திய பிரதேசத்தில் பாஜகவின் ஆதிக்கத்துக்கு காங்கிரஸ் முடிவு கட்டிய மகிழ்ச்சியில் அரியணை ஏறியது. ஆனால் இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் முதல்வராக இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ம.பி.யில் உள்ள மொத்தம் 29 தொகுதிகளில் 28-ல் பாஜக வென்றது.

இப்போது மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைப்பது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதே களநிலவரங்கள் சொல்லும் செய்தி. மத்திய பிரதேசத்தில் இதுவரை பாஜக- காங்கிரஸ் நேரடி மோதல் இருந்து வந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியும் களமிறங்க உள்ளது. பாஜக ஆட்சி மீதான அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என கணக்குப் போடுகிறது ஆம் ஆத்மி.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிதான் மீண்டும் வெல்லும் என்ற பெருநம்பிக்கையில் அக்கட்சியின் தலைவர்கள் உள்ளனர். இதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எடுத்த ம.பி. தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பையே காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றன. ம.பி.யில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிதான் வரும் என ஆர்.எஸ்.எஸ். கருத்து கணிப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாம்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்து கணிப்பு மட்டுமல்ல.. மேலும் 6 கருத்து கணிப்புகளுமே காங்கிரஸ்தான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என அடித்துச் சொல்லுகின்றனவாம். கடந்த ஜனவரி மாதம் வெளியான ஒரு கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 103 இடங்கள்தான் கிடைக்கும்; ஆட்சியை பறிகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பிப்ரவரி மாதத்தில் காங்கிரஸ் கட்சி எடுத்த அதிகாரப்பூர்வ கருத்து கணிப்பில் கூட பாஜகவுக்கு 95 இடங்கள்தான் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், ம.பி. மாநில உளவுத்துறையின் கருத்து கணிப்பு ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது. அதில் பாஜகவுக்கு 80-க்கும் குறைவான இடங்கள்தான் கிடைக்கும் என்கிற அதிர்ச்சி முடிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் Dainik Bhaskar உள்ளிட்டவை நடத்திய கருத்து கணிப்புகளில் வெறும் 70 இடங்களைத்தான் பாஜக பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 65 இடங்கள்தான் கிடைக்கும் என முடிவுகள் தெரிவிக்கின்றனவாம். தற்போது Navbharat Samachar ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் பாஜகவுக்கு 55 இடங்கள்தான் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அதாவது மத்திய பிரதேச மாநிலம் தொடர்பான அனைத்து தேர்தல் கணிப்புகளிலும் பாஜக பெரும் தோல்வியை சந்திக்கும்; அதுவும் வெறும் 55 இடங்கள்தான் பெறும்; காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை அறுவடை செய்யும் என்பதாகவே இடம்பெற்றுள்ளன. இதனால்தான் காங்கிரஸ் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம் ம.பி.யில்!
சாவு பயத்தை காட்டுறாங்க பரமா மோடில் பாஜக!












Click it and Unblock the Notifications