இது மசூதி அல்ல.. சரஸ்வதி கோவில் என அறிவித்து இஸ்லாமியர்களின் தொழுகைக்கு தடைபோட்ட உயர்நீதிமன்றம்
போபால்: மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த போஜ்ஷாலா கமலா மசூதியை சரஸ்வதி கோவில் என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக தொல்லியல் துறை வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, இஸ்லாமியர்கள் கேட்டால் சட்டத்துக்கு உட்பட்டு புதிய மசூதி கட்ட மாநில அரசு நிலம் வழங்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் போஜ்ஷாலா கமலா மவுலா மசூதி அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த மசூதி இந்து கோவில் என்று உரிமை கொண்டாடப்பட்டது.

அதாவது 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சரஸ்வதி கோவில் தான் இது என்று இந்துக்கள் உரிமை கோரின். இஸ்லாமியர்கள் தரப்பில் 13, 14ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கமல் மவுலா மசூதி என்று சொந்தம் கொண்டாடினர். இதனால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
இதையடுத்து கடந்த 2003ம் ஆண்டில் இந்துக்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், வசந்த பஞ்சமி தினத்திலும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் வெள்ளிக் கிழமைகளில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே இது கோவில் தான். இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைகளை முழுமையாக வழங்க வேண்டும் என்று ஹிந்து ஃப்ரண்ட் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பின் குல்தீப் திவாரி உள்ளிட்டவர்கள் மத்திய பிரதேசத்தின் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு
அந்த மனுவில், ''போஜ்ஷாலா கமல் மவுலா மசூதியை பழங்கால நினைவு சின்னம் மற்றும் தொல்லியம் தளம்என்ற அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். ஏனென்றால் இந்த இடம் வாக்தேவி (சரஸ்வதி) கோவிலாக கருதப்படுகிறது'' என கூறியிருந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் 2024 மார்ச் மாதம் அறிவியல் பூர்வமான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றத்தில் 2024 ஜூலை மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அறிக்கையில், ''பார்மர் வம்ச மன்னர்களின் காலத்தை சேர்ந்த கோவில் இருந்துள்ளது. அதன்பிறகு தான் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது'' என கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜய் குமார் சுக்லா மற்றும் அலோக் அவஸ்தி அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 248 பக்கத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சரஸ்வதி கோவில் என தீர்ப்பு
அதில், ''சர்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்டையில் அந்த இடம் பர்மார வம்ச மன்னரான ராஜா போஜருடன் தொடர்பு கொண்டுள்ளது உறுதியாகி உள்ளது. அவரது காலத்தில் இருந்து சமஸ்கிருதம் கற்பிக்கும் இடமாக செயல்பட்டுள்ளதை நிரூபிக்கின்றன. ராஜா போஜரின் காலத்து பல்வேறு இலக்கிய, கட்டடக்கலை சான்றுகள் இதனை உறுதி செய்கின்றன'' என்று கூறிய நீதிமன்றம் அது சரஸ்வதி கோவில் என்பதை உறுதி செய்தது.
தொழுகைக்கு தடை
அதுமட்டுமின்றி இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்கு தடை விதித்தும், இஸ்லாமியர்கள் தொழுகை செய்யவும் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொல்லியல் துறை சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் சில பகுதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இஸ்லாமியர்களுக்கான தொழுகை நடத்துவதற்கான அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ளது.
இருப்பினும் தொடர்ந்து தொல்லியல் துறை தான் கண்காணிப்பு மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொள்ளும். மேலும் தார் மாவட்டத்தில் மசூதி அல்லது தொழுகை கூடம் அமைப்பதற்கு இஸ்லாமியர்கள் நிலம் கோரி விண்ணப்பித்தால் மாநில அரசு சட்டத்துக்கு உட்பட்டு அதனை பரிசீலனை செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு முடிவு
இதற்கிடையே தான் இஸ்லாமியர்கள் சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தனது எக்ஸ் பக்கத்தில், ''மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்று நம்புகிறோர். பாபர் மசூதி தீர்ப்பைபோல் ஒற்றுமைகளை கொண்டுள்ளது'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications