அதிகாலை 2 மணிக்கு அழைத்து வரப்பட்ட பெண் எம்எல்ஏ.. ரிசார்ட்டில் நடந்த சண்டை.. ம.பியில் ஒரே பரபரப்பு!
மத்திய பிரதேச அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் கூட்டணி பெண் எம்எல்ஏ ஒருவர் ரிசார்ட்டில் இருந்து அதிகாலை 2 மணிக்கு வெளியே அழைத்து வரப்பட்டது பெரிய செய்தியாகி உள்ளது.
போபால்: மத்திய பிரதேச அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் கூட்டணி பெண் எம்எல்ஏ ஒருவர் ரிசார்ட்டில் இருந்து அதிகாலை 2 மணிக்கு வெளியே அழைத்து வரப்பட்டது பெரிய செய்தியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்களை பாஜகவினர் கடத்தி வைத்து இருக்கிறார்கள். அவர்களை வைத்து ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள் என்று மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதனால் அங்கு ரிசார்ட் அரசியல் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. டெல்லி அருகே குர்கானில் உள்ள ஐடிசி ஹோட்டலில் இவர்கள் எல்லோரும் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆட்சி கவிழும்
கமல்நாத் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாஜக இப்படி செய்கிறது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. இதனால மத்திய பிரதேசத்தில் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் நிலை ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை ஐடி ரெய்டு துரத்தி வருகிறது. அங்கு காங்கிரஸ் கட்சியின் புபேஷ் பாகல் ஆட்சி செய்து வருகிறார்.

என்ன சொல்கிறது
காங்கிரஸ் கட்சியின் புகாரின்படி, மொத்தம் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று குர்கானில் உள்ள ஐடிசி ஹோட்டலில் பாஜகவினர் மூலம் கடத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் 7 பேர் திரும்பி வந்துவிட்டனர். இன்னும் 4 பேர் அந்த ஹோட்டலில் இருக்கிறார்கள். அதேபோல் வேறு 4 மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கர்நாடகாவில் தனி ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

நேற்று இரவு
நேற்று இரவோடு இரவாக ஒரு பெண் எம்எல்ஏ மட்டும் அந்த ஹோட்டலில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ராமாபாய் இவர் என்று அடையலாம் காணப்பட்டுள்ளது. குர்கான் ஐடிசி ஹோட்டலுக்கு நேற்று இவரும் சென்று இருந்தார். இவருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் முதலில் சென்றதாக கூறப்படுகிறது. அதில் 7 பேர் திரும்பி வந்துவிட்டனர்.

ஐடிசி ஹோட்டல்
5 காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளே இருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் நேற்று இரவோடு இரவாக அந்த ஐடிசி ஹோட்டலுக்கு சென்றனர் . மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர் ஜீத்து பட்வாரி மற்றும் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் மகன் ஜெய்வர்தன் சிங் ஆகிய இருவரும் அந்த ஹோட்டலுக்கு சென்றனர். ஆனால் ஹோட்டல் நிர்வாகிகள் அவர்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை.

சண்டை போட்டனர்
அதன்பின் 1 மணிக்கு பிறகு ஜீத்து பட்வாரி மற்றும் ஜெய்வர்தன் சிங் இருவரும் அந்த ஹோட்டல் நிர்வாகிகள் உடன் சண்டை போட்டனர். உள்ளே விடும்படி சண்டை ஒரு, அறைக்குள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அந்த அறையில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பெண் எம்எல்ஏ ராமாபாய் இருந்தார். ராமாபாயிடம் ஜீத்து பட்வாரி மற்றும் ஜெய்வர்தன் சிங் இருவரும் பேசி அவரை சமாதானம் செய்தனர்.

ஹோட்டல்
இதையடுத்து ராமாபாய் அதிகாலை 2 மணிக்கு அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வந்தனர். காங்கிரஸ் கட்சி தலைவர்களை இன்று ராமாபாய் சந்திக்கிறார். அவரை பாஜக தலைவர்கள் மீண்டும் ஹோட்டலுக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் ஹோட்டலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று இரவு இன்னொரு காங்கிரஸ் எம்எல்ஏ பிஷாகுலால் சிங்கிடம் இதேபோல் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் கவிழும்
ஆனால் பிஷாகுலால் சிங் அந்த ஹோட்டலில் இருந்து வெளியே வர முடியாது என்று கூறிவிட்டாராம். இப்போது அந்த ஹோட்டலுக்குள் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். கர்நாடகாவில் இன்னும் 3 மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி எப்போதும் வேண்டுமானாலும் கவிழும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

நிலை என்ன
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 120 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்.அங்கு காங்கிரஸ் கட்சிக்கு 113 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு ஆதரவு தரும் பகுஜன் சமாஜ் கட்சியில் 2 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி கட்சியில் ஒரு எம்எல்ஏவும், நான்கு சுயேட்சைகளும் உள்ளனர்,அங்கு மெஜாரிட்டி பெற 116 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவிற்கு அங்கு 107 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது.












Click it and Unblock the Notifications