நீயில்லாம எப்படிடா வாழ்வேன்.. பேரனின் உடலுக்கு வைத்த தீயில் பாய்ந்து உயிரை விட்ட பாச தாத்தா.. சோகம்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவியை கொன்றுவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்தார். அந்த இளைஞரின் உடல் தீவைத்து எரிக்கப்பட்டபோது அவரது பிரிவை தாங்காத தாத்தா அந்த தீயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நம் நாட்டில் இருந்து உடன்கட்டை ஏறும் வழக்கம் என்பது ஒழிக்கப்பட்டு விட்டது. அதாவது முன்காலத்தில் கணவன் முன்கூட்டியே இறக்கும்போது அவரது உடல் எரியூட்டப்படும் போது மனைவியும் அதில் விழுந்து இறக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.

இந்த நடைமுறை என்பது பெண்களின் வாழும் உரிமையை பறிக்கும் வகையில் இருந்தது. இந்த முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது உடன்கட்டை ஏறும் வழக்கம் என்பது இல்லை.
ஆனாலும் கூட மத்திய பிரதேசத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் சிதி மாவட்டம் பஹ்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட சிகோலியா கிராமத்தை சேர்ந்தவர் அபய் ராஜ் யாதவ். திருமணம் ஆனவர். இவரது மனைவி பெயர் சவிதா யாதவ்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் திடீரென்று வீட்டில் சவிதா யாதவ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அபய் ராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக தகவல் அறிந்தவுடன் பஹ்ரி போலீசார் சென்று 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையின்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. இதுபற்றி துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்ரி திரிபாதி கூறுகையில், ‛‛மனைவி சவிதா யாதவை, கோடரியால் வெட்டி கொன்றுவிட்டு அபய் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அதுபற்றி விசாரித்து வருகிறோம்'' என்றார்.
இதற்கிடையே தான் பிரேத பரிசோதனை முடிவடைந்து சவிதா யாதவ் மற்றும் அவரது கணவர் அபய் ராஜ் ஆகியோரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரின் உடலுக்கும் குடும்பத்தினர் ஒன்றாக இறுதி சடங்கு நடத்தினர். அதன்பிறகு அவர்களின் உடல் எரிக்கப்பட்டது. இந்த வேளையில் பேரன் அபய் ராஜை நினைத்து அவரது தாத்தா ராமவதார் யாதவ் கதறி அழுது கொண்டிருந்தார். அவரை மற்றவர்கள் தேற்றி கொண்டிருந்தனர்.
இதற்கிடையே தான் நேற்று முன்தினம் இரவில் திடீரென்று தாத்தா ராமவதார் யாதவ் வீட்டில் இருந்து மாயமானார். அவரை குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அபய் ராஜ் எரிக்கப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது தாத்தா ராமவதார் யாதவின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அதாவது பேரன் அபய் ராஜின் பிரிவை தாங்க முடியாமல் அவரது சிதையில் குதித்து தாத்தா ராமவதார் யாதவ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications