நன்னடத்தையால் சீக்கிரம் ரிலீஸான பாலியல் குற்றவாளி! மீண்டும் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரம்
இந்தூர்: நன்னடத்தை காரணமாகச் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலையான பாலியல் குற்றவாளி மீண்டும் சிறுமியைப் பலாத்காரம் செய்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் பாலியல் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே பாலியல் குற்றவாளிகளுக்குக் கருணை காட்டினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் வகையிலான சம்பவம் இப்போது அரங்கேறியுள்ளது.
பலாத்காரம்: மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பலாத்கார வழக்கில் கடந்த 10 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துள்ளார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த அந்த நபர் மீண்டும் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதுவும் 5 வயது தலித் சிறுமியை அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார். அந்த கொடூரன் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுவாகச் சிறைத் தண்டனை என்பது ஒருவரைத் தண்டிப்பதைக் காட்டிலும் செய்த தவறை உணர்ந்து திருந்தவே தரப்படுகிறது. ஆனால், சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகும் இந்த நபருக்கு எந்தவொரு மனமாற்றமும் ஏற்படவில்லை போல... கடந்த 1.5 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து வெளியே வந்த அந்த நபர் மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
கொடூரன்: கடந்த புதன்கிழமை மாலை 5 மணியளவில் வெளியே சென்ற அந்த சிறுமி மீண்டும் வீட்டு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அந்த சிறுமியின் பாட்டி தேட ஆரம்பித்தார். 5 வயதே ஆன அந்த சிறுமியின் உடல் அருகில் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளதை அவரது பாட்டி கண்டுபிடித்துள்ளார். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரனுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
மனித மிருகமான ராக்கு என்கிற ராகேஷ் வர்மா, மிட்டாய் வாங்கி தருவதாகச் சொல்லி அந்த சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். சிறுமியைக் காப்பாற்ற வந்த பாட்டி இவனைப் பிடிக்க முயன்றுள்ளார். இருப்பினும், அவன் ஓடிச் சென்று அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிச் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்கள் சுமார் 2 மணி நேரம் தேடிய பின்னரே பாதிக்கப்பட்ட அந்த சிறுமியைக் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகே அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.. அந்த சிறுமி ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், ரேவாவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ சோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
ஷாக் சம்பவம்: கடந்த 2012ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தின் கோல்குவான் பகுதியில் இந்த கொடூரன் ஏற்கனவே நான்கரை வயது சிறுமியைப் பலாத்காரம் செய்தான். இதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.. ஆனால், சிறையில் நன்னடத்தை காரணமான மூன்றாண்டு சிறைத் தண்டனை அவனுக்குக் குறைக்கப்பட்டது.
இதனால் 18 மாதங்கள் முன்கூட்டியே அந்த நபர் விடுதலையானார். இதற்கிடையே விடுதலையான ஓராண்டிற்குப் பிறகு அந்த கொடூரன் மீண்டும் சிறுமியைப் பலாத்காரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications