ஒட்டுமொத்தமாக உயர்ந்த வாக்குப்பதிவு.. ஆனாலும் 30 தொகுதிகளில் சொதப்பல்! மத்திய பிரதேச நிலைமை இது!
போபால்: மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் 30 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது.
230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு கடந்த 17ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் 3ஆம் வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முழு ரிசல்டும் வெளியாகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆனால் 30 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு குறைந்திருக்கிறது.

அதாவது மாநிலம் முழுவதும் மொத்தம் 77.2 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே கடந்த 2018ஆம் ஆண்டு 75.6 சதவிகிதமாக வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த முறை அதிகபட்சமாக சைலனா தொகுதியில் 90.1 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக ஜோபாட் தொகுதியில் 54.4 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. என்னதான் 2018ம் ஆண்டை விட தற்போது ஒட்டுமொத்த வாக்குப்பதிவு அதிகரித்திருந்தாலும், இந்த முறை 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு வெகுவாக குறைந்திருக்கிறது என தேர்தல் ஆணைய அதிகாரி அமர்ஜீத் சிங் கூறியுள்ளார்.
சர்தார்பூர் தொகுதியில் (-7.3%), பர்வானியில் (-6.8%), சௌசர் (-6.1%), போபால் தென்மேற்கு (-5.48%) மற்றும் மோவ் (-5.2%) என இந்த 5 தொகுதிகளில் 2018ல் பதிவான வாக்குகளை விட 5% வாக்குகள் குறைந்திருக்கின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 4,359 வேட்பு மனுக்கள் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக நகர்ப்புறங்களை விட கிராமங்களில்தான் அதிக அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 31ம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் 2,916 மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இங்கு பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த முறையும் அக்கட்சியே மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயன்று வரும் நிலையில், காங்கிரஸ் பெரும் போட்டியாளராக உருவெடுத்துள்ளது. எனவே ரிசல்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications