‛‛மனைவி இன்றி வீணாகும் இரவுகள்’’.. தேர்தல் பணிக்கு செல்லாத ஆசிரியரின் ஷாக் விளக்கம்.. வேலையே போச்சே
போபால்: மத்திய பிரதேசத்தில் அரசு பள்ளி ஆசிரியர் தேர்தல் பணிக்கான பயிற்சி முகாமுக்கு செல்லவில்லை. இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் தேர்தல் பணிகள் அங்கு தீவிரமாக நடந்து வருகிறது.
தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஓட்டுப்பதிவின்போது பணியில் ஈடுபடும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சாத்னா மாவட்டம் அமர்பட்டான் பகுதியிலுள்ள மஹுதூர் மேல்நிலை பள்ளியில் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வரும் அகிலேஷ் குமார் மிஸ்ரா (35) என்பவரும் தேர்தல் பணிக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 16, 17ம் தேதிகளில் தேர்தல் பயிற்சி முகாம் நடந்தது. இதில் கலந்து கொள்ளும்படி அகிலேஷ் குமார் மிஸ்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு கடந்த மாதம் 27 ம் தேதி Showcause நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. அதில், ‛‛தேர்தல் பயிற்சி முகாமை புறக்கணித்த உங்களை ஏன் சஸ்பெண்ட் செய்யக்கூடாது?'' என கேள்வி எழுப்பி விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்கு அகிலேஷ் குமார் மிஸ்ரா கடந்த 31ம் தேதி விளக்கம் அளித்து கடிதம் எழுதினார். அதில் அவர் அளித்த விளக்கம் தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருந்ததாவது: எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என் முழு வாழ்க்கையும் மனைவி இல்லாமல் கழிகிறது. என் இரவுகள் அனைத்தும் வீணாகின்றன. எனக்கு முதலில் திருமணம் ஆக வேண்டும்.
என்னை திருமணம் செய்யும் பெண் எனக்கு வரதட்சணையாக ரூ.3.5 லட்சம் எனக்கு தர வேண்டும். அது ரொக்கம் அல்லது வங்கி கணக்குக்கு அனுப்பலாம். அதோடு ரேவா மாவட்டத்தில் உள்ள சிங்ரவுலி அல்லது சம்தாரியா பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு வாங்க எனக்கு கடன் உதவி செய்து தர வேண்டும்'' என தெரிவித்து இருந்தார்.
இந்த கடிதத்தை பார்த்த சாத்னா மாவட்ட கலெக்டர் அனுராக் வர்மா உடனடியாக அகிலேஷ் குமார் மிஸ்ராவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதுபற்றி அகிலேஷ் குமார் மிஸ்ராவை தொடர்பு கொண்டு பேச பலர் முயற்சித்தனர். ஆனால் அவர் கடந்த ஓராண்டுகளாக செல்போன் பயன்படுத்தவில்லை. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதுபற்றி அவருடன் பணியாற்றி வருபவர்களிடம் கேட்டபோது, ‛‛திருமணம் ஆகாததால் அகிலேஷ் குமார் மிஸ்ரா கடந்த 2 ஆண்டுகளாக மனவருத்தத்தில் உள்ளார். இதனால் தான் இப்படி ஒரு கடிதத்தை அவர் எழுதியுள்ளார்'' எனக்கூறி வருத்தப்பட்டனர்.












Click it and Unblock the Notifications