அரசு துறையில் 50,000 போலி ஊழியர்களை வைத்து பெரும் மோசடி..பாஜக ஆளும் மாநிலத்தில் என்ன நடந்தது?
போபால்: மத்தியப் பிரதேசத்தில் சுமார் 50 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு 6 மாத ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது. ஆனால், இதற்காக அங்குப் போராட்டம் எதுவும் வெடிக்கவில்லை.. ஏனென்றால் இவர்கள் அத்தனை பேரும் கோஸ்ட் ஊழியர்கள் எனக் கருதப்படுகிறது. இது என்ன சிக்கல்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களில் சுமார் 50,000 பேருக்கு, அதாவது அங்குள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் ஒன்பது சதவீதம் பேருக்குக் கடந்த ஆறு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. எது 9 மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லையா.. அப்போ மிகப் பெரிய போராட்டம் வெடித்து இருக்குமோ என நீங்கள் கேட்கலாம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

சம்பள மோசடி
இதுவே அங்குக் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது மபி அரசு ஆவணங்களில் புதைந்துள்ள ஒரு மர்மமாக உள்ளது. மேலும் இது மத்தியப் பிரதேச வரலாற்றில் மிகப்பெரிய சம்பள மோசடியாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்த ஊழியர்களின் ஆவணங்கள் எல்லாம் உரிய முறையில் இருப்பதாகவே பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களின் பெயர், பணியாளர் குறியீடு உள்ளிட்டவை ஆவணங்களில் உள்ளன. ஆனால் சில காரணங்களால் அவர்களின் சம்பளம் கடந்த ஆறு மாதங்களாக வழங்கப்படவில்லை. அவர்கள் சம்பளம் இல்லாத விடுப்பில் இருக்கிறார்களா? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டார்களா? அல்லது அவர்கள் மோசடியான கோஸ்ட் ஊழியர்களா எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.
பறந்த லெட்டர்
கடந்த மே 23ம் தேதி இது தொடர்பாகக் கருவூல ஆணையர் அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஒரு திடுக்கிடும் முரண்பாட்டு குறித்து விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில், "IFMIS-ன் கீழ் உள்ள நிரந்தர / தற்காலிக ஊழியர்களின் விவரங்கள் இந்தக் கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு டிசம்பர் 2024 முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. பணியாளர் குறியீடு இருந்தும் கூட IFMIS-ல் அவர்களின் சரிபார்ப்பு முழுமையடையவில்லை. மேலும், அவர்கள் வேலையை விட்டிருந்தால் அதற்கான செயல்முறையும் முடியவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தைத் தொடர்ந்து, 6000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் ரூ.230 கோடி மோசடி குறித்து 15 நாட்களில் விளக்கம் அளிக்க அவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை
இது தொடர்பாகக் கருவூல ஆணையர் பாஸ்கர் லக்ஷ்கர் கூறுகையில், "நாங்கள் தொடர்ந்து அரசு செலவுகளை ஆய்வு செய்கிறோம். அப்போது தான் இந்த முரண்பாடு கண்டறியப்பட்டது. இந்த ஊழியர்களின் கோட்களுக்கு சம்பளம் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.
இதையடுத்து கருவூலத் துறை இது தொடர்பான வெரிபிகேஷன் பிராசஸை ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு பிராந்திய அதிகாரியும் தங்கள் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்படாத எந்த ஊழியரும் வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த நிதி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கலாம். ஆனால், இத்தனை பேருக்கு 6 மாத ஊதியம் எடுக்கப்படவில்லை என்றால் அது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது" என்றார்.
கோஸ்ட் ஊழியர்கள்
சம்பளம் பெறாத 50,000 ஊழியர்களில் 40,000 பேர் நிரந்தர ஊழியர்கள் மற்றும் , 10,000 பேர் தற்காலிக ஊழியர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கான மொத்த சம்பள நிலுவைத் தொகை ரூ. 230 கோடியாகும். மாதக்கணக்கில் சம்பளம் வழங்கப்படாததால், மிகப்பெரிய மோசடி நடந்திருக்கலாம் எனச் சந்தேகம் அதிகரித்துள்ளது. இதைப் பேய் ஊழியர்கள், அதாவது கோஸ்ட் ஊழியர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
அதாவது வேலை பார்க்காமல் அல்லது அப்படி ஊழியர்களே இல்லாமல் குறிப்பிட்ட சிலருக்கு செக் மூலம் இல்லாமல் வேறு விதமாக ஊதியம் போய்க் கொண்டு இருந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், போன்ற மோசடி எப்படி நடந்திருக்கும்? அரசுக்குத் தெரியாமல் ரூ. 230 கோடி மோசடி நடக்க வாய்ப்பு உள்ளதா? 9% ஊழியர்களும் இல்லை என்றால் இந்தளவுக்கு ஊழியர்கள் பற்றாக்குறையில் எப்படி அரசு நிர்வாகம் இயங்கும் எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications