வெடித்து சிதறும் பட்டாசு ஆலை.. அலறி துடித்த மக்கள்.. 11 பேர் பலி, 200+ பேர் படுகாயம்! அதிர்ந்த ம.பி
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மோசமான வெடி விபத்து பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரைப் பட்டாசு உற்பத்தி முக்கியமான தொழிலாக இருக்கிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு பொதுவாக பல்வேறு விதிகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும்.

ஆனால், பல நேரங்களில் பட்டாசு ஆலையில் முறையான விதிகள் பின்பற்றப்படுவதில்லை. இதனால் சில நேரங்களில் மிக மோசமான விபத்துகளும் ஏற்படுகிறது.
அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஹர்தா மாவட்டத்தில் உள்ள பைராகர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை மிக மோசமான வெடி விபத்து ஏற்பட்டது. காலையில் ஆலையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதற ஆரம்பித்த நிலையில், மதியத்திற்கு பிறகும் கூட தீ முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இந்த மிக மோசமான வெடிவிபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு உடலில் 70%க்கும் மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்த மத்தியப் பிரதேச அமைச்சர் உதய் பிரதாப் சிங், இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு நான்கு 108 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இரண்டு மருத்துவர்கள் தலைமையிலான குழுவும் ஹர்தாவுக்கு விரைந்துள்ளனர். மேலும், வெடி விபத்து நடந்த ஹர்தாவுக்கு 15 மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், 4 ஊர்காவல் படையினர், பல தீயணைப்பு வீரர்களும் விரைந்துள்ளனர். தொழிற்சாலைக்கு அருகே வீடுகள் இருக்கும் நிலையில், அங்குள்ளவர்கள் முதலில் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியப் பிரதேசத்தின் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் துயரத்தை ஏற்படுத்துகிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது. இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications