வறுமையில் வாடிய மகாபாரத நடிகர் சதீஷ் கவுல் கொரோனாவால் உயிரிழப்பு
லூதியானா : மகாபாரத தொடரில் இந்திரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சதிஷ் கவுல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று லூதியானாவில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 73.
சதீஷ் கவுல், 300 க்கும் மேற்பட்ட பஞ்சாபி மற்றும் இந்தி மொழி படங்களில் நடத்து, புகழ்பெற்ற நடிகராக இருந்தவர். இவர் கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், தான் கடுமையான பண தட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி, அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தனது அன்றாட செலவுகளுக்கு கூட மிகவும் சிரமபடுவதாக கூறி இருந்தார்.

உறுதி செய்த ப்ரீத்தி சப்ரு
இந்நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், இன்று உயிரிழந்துள்ளார். இந்த தகவலை தயாரிப்பாளரும் நடிகையுமான ப்ரீத்தி சப்ரு உறுதி செய்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், கடந்த 3 நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அவருக்கு கொரோனா பாசிடிவ் என கண்டறியப்பட்டது. இதனால் நர்ஸ் ஒருவர் உடன் இருந்து அவரை கவனித்துக் கொண்டார்.

ஃபோன் எடுக்க தவறிவிட்டேன்
பொதுவாக அவரது உடல்நிலை குறித்து நர்ஸ் அடிக்கடி எனக்கு ஃபோன் செய்து கூறுவார். ஆனால் எங்கள் பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் அமைத்து நடத்திக் கொண்டிருந்த வேலைகளில் பிஸியாக இருந்ததால், இன்று நர்ஸ் ஃபோன் செய்த போது என்னால் அழைப்பை ஏற்க முடியவில்லை. இப்போது அதற்காக வருத்தப்படுகிறேன். எங்கள் பகுதியில் 600 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

பேச நினைத்திருக்கலாம்
நர்ஸ் எனக்கு ஃபோன் செய்த போது நான் எடுத்திருக்க வேண்டும். பிறகு அவர் உயிரிழந்த செய்தி தெரிந்து மிகவும் வேதனைப்பட்டேன். ஒருவேளை கடைசியாக சதீஷ் என்னிடம் ஏதாவது பேச நினைத்திருக்கலாம். இன்று பகல் 2 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது என ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

சதீஷ் உடனான நினைவுகள்
சதீஷ் பற்றிய நினைவுகளை பகிர்ந்த ப்ரீத்தி, அவர் மிகவும் பாசமான மனிதர். எனக்கு 11 வயதாக இருந்த போதிலிருந்து அவரை எனக்கு தெரியும். அவர் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். அவருடன் ஒரே ஒரு பஞ்சாபி படத்தில் நான் நடித்துள்ளேன். பஞ்சாப் சினிமாவில் சீனியர் என எனக்கு எப்போதும் அவர் மீது மரியாதை உண்டு.

முதியோர் இல்லத்தில் வசித்த சதீஷ்
இந்தியில் பல டிவி தொடர்களிலும், படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தான் அவர் பஞ்சாப்பில் வசித்து வருகிறார். அவர் கீழே விழுந்து முதுகில் ஆப்பரேஷன் செய்தது முதல் இந்த நர்ஸ் தான் அவரை கவனித்து வருகிறார். வெளிநாடு வாழ் இந்தியராக முதியோர் இல்லத்தில் தான் சிறிது காலம் வாழ்ந்தார். அது மிகவும் அழகான இடம். ஆனால் அங்கிருந்த மேனேஜருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வந்து விட்டார். அதற்கு பிறகு நர்ஸ் ஒருவர் தான் அவருடனேயே இருந்து அவரை கவனித்து வந்தார். கடந்த ஆண்டு தனது சகோதரி மற்றும் அவரின் மகனுடன் எனது வீட்டிற்கு அவர் வந்திருந்தார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்றார்.

சதீஷின் சோக கதை
2011 ல் மும்பையில் இருந்து பஞ்சாப்பிற்கு சென்ற சதீஷ் கவுல், அங்கு நடிப்பு பள்ளி ஒன்றை நடத்தி வந்துள்ளார். தொடர்ந்து அதை அவரால் நடத்த முடியாமல் போய் உள்ளது. சமீபத்தில் பிடிஐ நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியின் போது, எப்படி உங்கள் ரசிகர்கள் உங்களை மறந்தனர் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சதீஷ், அவர்கள் என்னை மறந்தால் பரவாயில்லை. என்னிடம் அளவுக்கு அதிகமான அன்பும், நன்றியும் உள்ளது. ரசிகர்கள் தந்த அன்பிற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.

நம்பிக்கையுடன் இருந்த சதீஷ்
தற்போது நான் வாழ்வதற்கு கவுரவமான இடம் ஒன்றை வாங்க நினைக்கிறேன். அந்த தீ இப்போதும் என் மனதில் உள்ளது. எதுவும் முடிந்து விடவில்லை. இன்று கூட யாராவது ஒருவர் எனக்கு நடிக்க ஒரு வாய்ப்பு தருவார்கள் என நம்புகிறேன். என்னால் முடியும். மீண்டும் நான் நடிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications