காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா மகதாயி நதியில் குடிநீர் கேட்டு கதறுகிறது...
பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரை திறந்துவிடாமல் வஞ்சித்து வரும் கர்நாடகா தற்போது மகதாயி நதியில் குடிநீர் கோரி போராட்டத்தில் குதித்துள்ளது. இதனால் வடகர்நாடகா பகுதிகள் போர்க்களமாக கொந்தளித்து கிடக்கிறது. இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு வடகர்நாடகா விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.
காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு உரிய நீரை எந்த ஒரு ஆண்டும் கர்நாடகா திறந்துவிடுவதே இல்லை. இதனால் தமிழகத்தின் காவிரி டெல்டா பாசன பகுதிகள் வஞ்சிக்கப்பட்டு முப்போக சாகுபடி மலையேறிப் போய்விட்டது.
என்னதான் உச்சநீதிமன்றம் சொன்னாலும் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் சட்டாம்பிள்ளைத்தனமாக இறுமாப்புடன் நடந்து கொண்டுதான் இருக்கிறது கர்நாடகா. இதை எதிர்த்து தமிழகம் நடத்தும் சட்டப் போராட்டங்களையோ அறப்போராட்டங்களையோ மதிக்காமல் வஞ்சித்தே வருகிறது கர்நாடகா.

மகதாயி நதி
இப்போது மகதாயி நதியில் குடிநீர் கேட்டு மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது கர்நாடகா. மகதாயி நதி, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் ஓடுகிறது. இந்த நதிநீர் பங்கீடு தொடர்பாகவும் பிரச்சனை இருந்து வருகிறது.

குடிநீர் கோரிய கர்நாடகா மனு தள்ளுபடி
இது தொடர்பாக மகதாயி நடுவர் மன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நடுவர் மன்றத்தில் வடகர்நாடகாவின் தார்வார், கதக், பெலகாவி, பாகல்கோட்டை மாவட்டங்களின் குடிநீருக்காக 7.56 டி.எம்.சி தண்ணீர் எடுக்க அனுமதி கோரியிருந்தது கர்நாடகா. ஆனால் நடுவர் மன்றமோ கர்நாடகாவின் மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வடகர்நாடகாவில் போராட்டம்
இத்தீர்ப்பு வெளியான உடனேயே வடகர்நாடகாவில் போராட்டங்களும் வன்முறையும் வெடித்தன. தார்வாட் மாவட்டத்தில் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன.

தடியடி- கைது
வடகர்நாடகாவின் பல பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை. சில இடங்களில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்பிக்கள் தலைமறைவு
மக்களின் பெருங்கோபத்துக்கு அஞ்சி காங்கிரஸ், பாஜக எம்.பி.க்கள் வெளியே நடமாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மகதாயி நதிநீர் பகுதியைச் சேர்ந்த எம்.பிக்கள் கூட்டாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இன்று பந்த்
இதனிடையே இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு வடகர்நாடகா விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications