இரவில் மக்கள் பார்க்கும் "அந்த" வீடியோவைத் தான் நாங்களும் பார்க்கிறோம்.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு
புனே : இரவு நேரத்தில் செல்போனில் மக்கள் என்ன வீடியோக்களை பார்க்கிறார்களோ அதைத் தான் நாங்களும் பார்க்கிறோம் என்று மகாராஷ்ட்ர அமைச்சர் கிரிஷ் பட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ர மாநிலம் புனேவில் நடந்த மாணவர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கில், கிரிஷ் பபட் பேசினார். அப்போது அவர்...
"நீங்கள் இரவு நேரத்தில் உங்கள் மொபைல் போனில் என்ன மாதிரியான வீடியோக்களைப் பார்க்கிறீர்களோ அந்த மாதிரியான வீடியோக்களையே நாங்களும் பார்க்கிறோம். எங்களுக்கு வயதாகிவிட்டது என எண்ணாதீர்க்கள். தோற்றத்தில் முதுமை இருந்தாலும் உள்ளத்தில் நாங்கள் இளைஞரே" என்றார்.
ஆபாசப் படங்களை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகச் பரவியது. அமைச்சரின் பேச்சு மகாராஷ்ட்ர மாநில ஆளும் பாஜகவினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.
மற்றொருபுறம் மாணவர்கள் மத்தியில் அமைச்சர் கிரிஷ்பட், இவ்வாறு பேசியதற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அமைச்சரின் வீட்டின் முன் திரண்டு மவுனப் போராட்டம் நடத்தினர். என்.சி.பி கட்சியின் வந்தனா சவான் கூறும்போது, "அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றது. அநாகரிகமானது" என்றார்.
சிவசேனா மூத்த தலைவர் நீலம் கோரே, "கலாச்சார தலைநகராக கருதப்படும் புனேவில் ஏற்பட்டுள்ள துர்சம்பவம் அமைச்சரின் பேச்சு" எனக் கூறியுள்ளார்.
சர்ச்சைகள் வலுத்துவரும் நிலையில் தனது பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அமைச்சர் பட், "அது நகைச்சுவைக்காக கூறப்பட்டதே தவிர அதில் எவ்வித உள்ளர்த்தமும் இல்லை. இருப்பினும் அதை நான் சொல்லாமல் இருந்திருக்கலாம்" என்றார்.