ஹோட்டலுக்கு வந்த அந்த "புள்ளி".. முடக்கப்படும் சிவசேனா கட்சி சின்னம்? மகாராஷ்டிராவில் பெரிய ட்விஸ்ட்
கவுகாத்தி: நேற்று குஜராத்தில் தங்கி இருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிவசேனா சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முடக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
மகாராஷ்டிரா அரசியலில் உச்ச கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசின் மாபெரும் கூட்டணிக்கு எதிராக சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே குதித்து உள்ளார். இவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று குஜராத் சென்று ரிசார்ட்டில் தங்கினார்.
அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கும் இவர் தனக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அசாம்
இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக இவர்கள் குஜராத்தில் இருந்து அசாம் மாநில கவுகாத்தி சென்றனர். அங்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாஜக எம்எல்ஏக்கள்தான் கவுகாத்தியில் வரவேற்றனர். முன்னதாக இவர்கள் தங்க வைக்கப்பட இருந்த ஹோட்டலுக்கு அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சென்று பார்வையிட்டார். ஹோட்டல் ஏற்பாடுகளை இவர் நேரில் பார்வையிட்டார்.

சின்னம் முடக்கமா?
இதனால் இந்த அனைத்து விஷயங்களுக்கும் பின் பாஜக இருக்கிறதோ என்ற கேள்வி தீவிரம் அடைந்துள்ளது. தனக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்று ஷிண்டே தெரிவித்துள்ளார். அதாவது மொத்த எம்எல்ஏக்களில் 3ல் இரண்டு பங்கு சிவசேனா எம்எல்ஏக்கள் தன் பக்கம் இருப்பதாக அவர் கூறியுள்ள்ளார். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 169 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் சிவசேனாவிற்கு 56 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

சின்னம் முடக்கம்?
அங்கு பெரும்பான்மை பெற 145 எம்எல்ஏக்கள் தேவை. இப்போது 40 எம்எல்ஏக்கள் சிவசேனாவில் அதிருப்தியில் இருப்பதால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு சின்னமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 3ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் சிவசேனாவின் அதிருப்தியில் இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. அவர்கள் சட்டசபையில் தனியாக இயங்க முடியும். அதோடு சிவசேனா சின்னத்தை முடக்கும்படியும் கோரிக்கை விடுக்க முடியும் என்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை என்ன?
அங்கு ஆட்சி கவிழாமல் இருக்க ஷிண்டே முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி மீண்டும் பாஜகவோடு கூட்டணி வையுங்கள். அதுதான் முறையாக இருக்கும். பாஜகவுடன் சேர்ந்து நாம் ஆட்சி செய்வதே சரியான கூட்டணியாக இருக்கும் என்று ஷிண்டே உத்தவ் தாக்கரேவிடம் கூறி இருக்கிறாராம். பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக இருந்தால் மீண்டும் மகாராஷ்டிரா வருகிறேன் என்று ஷிண்டே கூறி இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications