மகராஷ்டிராவில்தான் “கொலைகாரிகள்”அதிகம் - அதிரவைக்கும் குற்ற ஆவண காப்பகம்!
மும்பை: இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் குற்றங்கள் செய்ததாக அதிகளவில் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் 2014 ஆம் ஆண்டில் குற்றங்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை வாரியாக மாநிலங்களை வகைப்படுத்தியுள்ளது.
கொலை உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததற்காக பெண்கள் அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் கொலைக்குற்றங்கள் தொடர்பா 579 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, உத்தரபிரதேசமும் (472), கர்நாடகா (330), மேற்குவங்கம் (317) மற்றும் மத்தியபிரதேச மாநிலம் (316) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 45 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கொலை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 1,94,867 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில், 30,568 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.