பாஜக கூட்டணி அரசின் மகாராஷ்டிராவில் தார்பாய் மாதிரி ரோட்டையே அலேக்காக தூக்கிய மக்கள்! இவ்ளோதான் தரம்
மும்பை: புதிதாகப் போடப்பட்ட சாலை அப்படியே தார்பாய் போல கையோடு வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதை நக்கலடித்து வருகின்றனர்.
எந்தவொரு பகுதி அல்லது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சாலை போக்குவரத்து முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும்... எந்தவொரு பகுதிக்கும் முதலில் வருவது என்னவோ சாலைகள் தான். சாலைகளே வளர்ச்சிக்கு அடித்தளமிடுகிறது.
இதனால் அனைத்து மாநில அரசுகளும் சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இருப்பினும், புதிய சாலைகள் தான் ஊழலும் அதிகம் நடக்கவும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

சாலைகள்: புதிய சாலைகள் அமைப்பதில் ஊழல் எனப் பல குற்றச்சாட்டுகளை பார்த்திருப்போம். ஏற்கனவே இருக்கும் சாலைகளை நீக்காமல் அதன் மேலே புதிய சாலைகளை அமைப்பது, தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துவது எனப் பல குற்றச்சாட்டுகளை நாம் பார்த்திருப்போம். இதனால் எவ்வளவு கோடி செலவில் இந்த புதிய சாலைகளை அமைத்தாலும் கூட அவை சில காலங்களிலேயே பயன்படுத்தவே முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது.
அதேநேரம் இப்போது இணையத்தில் பரவும் வீடியோ அதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் இருக்கிறது. இந்த வீடியோவில் கிராம மக்கள் சிலர் சேர்ந்து கொண்டு சாலையை அப்படியே தூக்கிவிடுகிறார்கள். அந்த புதிய சாலையும் அப்படியே வந்துவிடுகிறது. அதாவது சாலைக்கு அடியே ஏதோ பாய் போல வைத்து, அதற்கு மேல் இந்த ரோட்டை போட்டுள்ளனர். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

மகாராஷ்டிரா: இந்த வினோதமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.. 38-வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், உள்ளூர் ஒப்பந்தக்காரர் போட்டுள்ள சாலை எந்தளவுக்குத் தரக்குறைவாக உள்ளது என்பதையே இது காட்டுவதாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.ராணா தாக்கூர் என்ற உள்ளூர் ஒப்பந்தக்காரர் உண்மையில் சாலையை அமைக்கவில்லை என்றும் தார்பாயை போட்டு அதற்கு மேல் ஜல்லியை கொட்டி அனைவரையும் ஏமாற்றியுள்ளதாக அவர்கள் சாடியுள்ளனர்.
இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள கர்ஜத்-ஹஸ்ட் போகாரி என்ற பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டம் கீழ் அமைக்கப்பட்ட சாலையைத் தான் இவ்வளவு மோசமாக உள்ளதாகக் கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை ஒப்பந்ததாரர் முற்றிலுமாக மறுத்துள்ளார். சாலை அமைக்கத் தான் ஜெர்மன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக ஒப்பந்ததாரர் கூறினார்.

இருப்பினும், வீடியோவில் அடியில் ஏதோ பாயை போட்டு சாலையை அமைத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. உள்ளூர் மக்கள் மகாராஷ்டிர அரசையே இதற்குச் சாடியுள்ளனர். மேலும், தரக்குறைவான பணிக்கு ஒப்புதல் அளித்த பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் சாலைகள்: மேக் இன் இந்தியா இணையதளத்தின்படி, 63.32 லட்சம் கிலோமீட்டர் நீளத்தில் உலகின் இரண்டாவது பெரிய சாலை கட்டமைப்பைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டில் சாலைப் பணிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒப்பந்ததாரர்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொதுப்பணித் துறைகள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், எல்லைச் சாலைகள் அமைப்பு மற்றும் இந்திய நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் அகாடமி ஆகிய அமைப்புகள் சாலை போடும் பணிகளைக் கண்காணித்து வருகிறது.
பொதுவாகச் சாலை கட்டுமானத்தில், சரளை, மணல், தார் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்படும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், சாலைகள் அதிக காலம் இருப்பதை உறுதி செய்ய கான்கிரீட் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications