ராகுல்காந்தியின் கார் மீதான தாக்குதல்.... மோடி, அமித்ஷாவுக்கு வளையல் அனுப்பிய மகளிர் காங்கிரஸ்
குஜராத்தில் ராகுல்காந்தியின் பாதுகாப்பு வாகனத்தின் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு மகளிர் காங்கிரஸார் வளையல்களை அனுப்பியுள்ளனர்.
பனாஜி: குஜராத் மாநிலத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட சென்ற ராகுல் காந்தியின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் கோவா மாநில மகளிர் காங்கிரஸ் கட்சியினர் வளையல் அனுப்பியதால் பரபரப்பு நிலவியது.
குஜராத் மாநிலத்தில் வெள்ள சேதங்களைப் பார்வையிட சென்ற அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசப்பட்டது. இதில் அவரது கார் கண்ணாடிகள் உடைந்தன. இதுதொடர்பாக போலீஸார் சிலரை கைது செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், குஜராத்தில் ராகுல் காந்தி கார் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவா மகளிர் காங்கிரஸார் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு வளையல்களை அனுப்பி வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.