ஆந்திரா, தெலுங்கானா வனப்பகுதிகளில் ஒளிந்திருக்கும் ‘யுரேனியம்’ புதையல்
ஹைதராபாத்: ஆந்திர மற்றும் தெலுங்கானா வனப்பகுதிகளில் அணுமின் உற்பத்திக்கு பயன்படும் யுரேனியம் அதிகளவில் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த யுரேனியங்களை வெளியே எடுப்பதன் மூலம் இந்தியாவின் யுரேனியத் தேவை பூர்த்தி செய்யப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அணுமின் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக யுரேனியம் விளங்குகிறது. தற்போது இந்த யுரேனியத்தை வெளிநாடுகளில் இருந்து இந்தியா பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா வனப்பகுதிகளில் அதிகளவில் யுரேனியம் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆய்வு...
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் வனப்பகுதியில் உஸ்மானியா பல்கலைக் கழகம் மற்றும் அணு தாதுப்பொருள் இயக்குநரகமும் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். 45 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அப்பகுதியில் பூமிக்கடியில் அளவுக்கு அதிகமாக யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தரமானது...
இந்த வனப்பகுதியானது ஆந்திராவில் தொடங்கி தெலுங்கானா வரை நீள்கிறது. தற்போது இப்பகுதியில் கண்டுபிடித்துள்ள யுரேனியமானது கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைக்கும் யுரேனியத்தை விட தரமானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
6 டன் யுரேனியம்...
மேலும், ஆந்திர மாநிலத்தில் சுமார் 5 லட்சம் டன் யுரேனியமும், தெலங்கானாவில் ஒரு லட்சம் டன் யுரேனியமும் பூமிக்கடியில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யுரேனிய சுரங்கம்...
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஏற்கனவே கடப்பா மாவட்டம் தும்மளபல்லே கிராமத்தில் யுரேனிய சுரங்கம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று நலகொண்டா மாவட்டம் லம்பாபூர் - பெட்டகட்டா பகுதியிலும் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அணுத்தேவை பூர்த்தியாகும்...
ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலும் இதே போன்று அணுமின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீசைலம் பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள யுரேனியம் படுகைகளால், இந்தியாவின் அணுத் தேவை பூர்த்தி செய்யப் படும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.