ஆம் ஆத்மி கட்சியில் பிரபல நாட்டிய கலைஞர் மல்லிகா சாராபாய்!
அகமதாபாத்: சமூக ஆர்வலரும், பிரபல நாட்டிய கலைஞருமான மல்லிகா சாராபாய் நேற்று ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வஸ்னா பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்துக்கு சென்ற அவர், தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகா சாராபாய்; ஊழலுக்கு எதிராக போராடி வரும் தான், எந்த கட்சியின் கொள்கையிலும் தனக்கு உடன்பாடு இல்லாததால் கடந்த லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டதாகவும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் தனது கொள்கைகளுடன் ஒத்திருப்பதால் அக்கட்சியில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.
குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து நரேந்திர மோடி அரசை மல்லிகா சாராபாய் கடுமையாக விமர்சித்தார். கடந்த லோக்சபா தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மல்லிகா சாராபாய்.