மல்லையாவின் டுவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள்.. சொத்து விவரம் வெளியிட போவதாக மிரட்டல்!
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். விஜய் மல்லையாவின் சொத்து விவரங்களை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளனர்.
டெல்லி :தொழிலதிபர் விஜய் மல்லையாவின் டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் மல்லையாவின் சொத்து விவரங்கள் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ள ஹேக்கர்கள் மொத்த சொத்து விவரங்களையும் வெளியிடப்போவதாக எச்சரித்துள்ளனர்.
தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதனை திரும்ப செலுத்தாமல் போக்குக்காட்டி வந்த அவர் கடந்த சில மாதங்களாக லண்டனில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். தங்களை லீஜன் என தெரிவித்துக்கொண்ட ஹேக்கர்கள் அந்தப்பக்கத்தில் மல்லையா தொடர்பான முகவரிகள், போன் நம்பர்கள், மற்றும் இமேயில் முகவரிகள் பாஸ்வேர்டுகளை வசப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் விஜய் மல்லையாவின் வெநாட்டு சொத்து விவரம், வங்கிக்கண்க்கு மற்றும் சில ஆவணங்களையும் அவர்கள் ட்வீட் செய்துள்ளனர். இங்கிலாந்தில் மல்லையாவிடம் இருப்பதாக சில ஆடம்பர கார்களின் விவரத்தையும் அவர்கள் வெளிட்டுள்ளனர். இந்த தகவல்கள் அவரிடம் உள்ளதன் ஒரு பகுதி தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்த ஓரிரு நாட்களில் மல்லையாவின் வங்கிக்கணக்கு விவரம் வெளிநாட்டு சொத்துகள் என அனைத்து விவரத்தைய்ம டுவிட்டரில் வெளியிடவுள்ளதாகவும் அந்த ஹேக்கர்கள் குழு மிரட்டியுள்ளது.மேலும் தங்களின் இந்த ஹேக்கின் முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்றும் லீஜன் ஹேக்கர் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே தமது ட்வீட்டர் கணக்கு ஹேக்கர்களால் அத்துமீறப்பட்டுள்ளது என அதே கணக்கில் 2 ட்வீட்டுகள் மூலம் மல்லையா தெரிவித்துள்ளார். அவர்கள் வெளியிடும் தகவல்களை கண்டு கொள்ளாதீர்கள் என்றும் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ட்வீட்டர் கணக்கு விரைவில் மீட்கப்படும் என்று கூறியுள்ள மல்லையா இ-மெயில் கணக்குகளை ஹேக் செய்துவிட்டதாக லீஜன் குழு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இது நகைச்சுவையாக இருப்பதாகவும் மல்லையா கூறியுள்ளார்.
தற்போது லண்டனில் உள்ள மல்லையா இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் உள்ளார். இது தொடர்பான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதும், அவரை கைது செய்ய பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications