வக்கீலாக மாறிய மம்தா.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய திரிணாமுல் தலைவர்.. அதிரும் வங்கத்து அரசியல்!
கொல்கத்தா: மேற்கு வங்க அரசியலைக் கடந்த 15 ஆண்டுகளாகத் தனது கண்ட்ரோலில் வைத்திருந்த தீதி மம்தா பானர்ஜி, இன்று ஒரு வக்கீல் அவதாரத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார். 15 ஆண்டுக்கால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு பாஜக ஆட்சியை அமைத்துள்ள நிலையில், இந்தச் சட்டப் போராட்டம் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தோடு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடந்த மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் 15 ஆண்டு மம்தா ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்திருந்தது. அங்கு முதல்முறையாக பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கச் சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்த பிறகு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், இன்று மம்தா பானர்ஜி கறுப்பு நிற வழக்கறிஞர் கவுன் அணிந்து நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வன்முறை
திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜியின் மகன் சிர்ஷான்யா பானர்ஜி இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். 15 ஆண்டுக்கால மம்தாவின் கோட்டை சரிந்து, பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அரசியல் தொண்டர்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க மம்தாவே நேரடியாக நீதிமன்றத்தில் களமிறங்கியுள்ளார்.
இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "எங்கள் மதிப்பிற்குரிய தலைவி மம்தா பானர்ஜி, வங்கத்தில் பாஜக கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறை தொடர்பான வழக்கில் வாதிட இன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு நேரில் சென்றார். அவர் வங்காள மக்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது" எனப் பதிவிட்டுள்ளது.
போராடும் மம்தா
வெறுப்பு அரசியலுக்கு எதிராகத் துணிச்சலுடனும் உறுதியுடனும் மம்தா போராடி வருவதாகத் திரிணாமுல் குறிப்பிட்டுள்ளது.. திரிணாமுல் மேலும், "பாஜகவின் கட்டுப்பாடற்ற போக்கிற்கு எதிராக உறுதியாக நிற்கும் மம்தாவைப் போன்ற ஒரு தலைவரை இன்று தேசத்தில் பார்க்க முடியாது" எனவும் பதிவிட்டுள்ளது.. மம்தாவின் இந்த நீதிமன்ற வருகை, அவரது தொண்டர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
மேற்கு வங்க அரசியல்
மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. அதில் சுவேந்து அதிகாரி தலைமையில் தேர்தலைச் சந்தித்த பாஜக 207 இடங்களில் வென்றது. மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 சீட்களில் மட்டுமே வென்றது. அதிலும் குறிப்பாக மம்தா பானர்ஜியே பவானிபூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். பாஜகவின் சுவேந்து அதிகாரி பவானிபூரில் 73,917 வாக்குகளைப் பெற்றார். மறுபுறம் மம்தா வெறும் 58 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
மம்தாவுக்கு எதிராக சுவேந்து அதிகாரி களமிறங்கி வீழ்த்துவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியிலும் மம்தாவை சுவேந்து அதிகாரி வீழ்த்தி இருந்தது. மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரிக்கு மேற்கு வங்க முதல்வர் பதவியை பாஜக கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications