குண்டர்கள் மூலம் வன்முறை வேண்டாம்.. மம்தா ஆன்ட்டி பொறுமையாயிருங்க .. சுவேந்து அதிகாரி அட்வைஸ்!
கொல்கத்தா: மக்கள் வளர்ச்சி அரசியலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், மம்தா பானர்ஜி தேர்தலில் தோற்பது உறுதி என்றும் நந்திகிராமில் வாக்களித்த சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.
நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் மோதுகின்றனர் .

மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட தேர்தல்
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று 30 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 2ம் கட்ட தேர்தலுக்காக 171 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

சுவேந்து அதிகாரி-மம்தா போட்டி
இரண்டாம் கட்ட தேர்தலில் சுமார் 76 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 30 தொகுதிகளில் தேர்தல் நடந்தாலும் அனைவரின் கவனமும் நந்திகிராம் தொகுதியை நோக்கி திரும்பியுள்ளது. அந்த தொகுதியில் மம்தாவின் முன்னாள் ஆதரவாளரும், இந்நாள் எதிரியுமான பாஜக சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் களமிறங்கினார் மம்தா பானர்ஜி.

வாக்கு செலுத்திய அதிகாரி
இதனால் நந்திகிராம் தொகுதி நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பதற்றமான நந்திகிராம் தொகுதியில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க, அங்கு சுமார் 20 பாதுகாப்பு படை குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் அங்கு 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.

மம்தா தோற்பது உறுதி
பின்னர் நிருபர்களிடம் சுவேந்து அதிகாரி கூறுகையில், ' இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்பது உறுதி. முழு நாடும் நந்திகிராமைப் பார்த்துக் கொண்டிருப்பதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வருமாறு கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சி ஏற்படுத்தும் அரசியல் அல்லது திருப்திப்படுத்தும் அரசியல் இங்கு வெல்லுமா என்று மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.66 வயதான மம்தா அத்தை முதல்வராக இருப்பதால் பொறுமையை காட்ட வேண்டும். உங்கள் கட்சியின் குண்டர்கள் மூலம் வன்முறையை ஏற்படுத்தக் கூடாது. அவர் பிரதமருக்கு இழிவான மொழியைப் பயன்படுத்துகிறார். இது முதல்வர் பதவிக்கு அழகல்ல" என்று சுவேந்து அதிகாரி கூறினார்.












Click it and Unblock the Notifications