"தப்பா இருக்கு.." டென்ஷன் மோடில் மம்தா பானர்ஜி.. இந்தியா கூட்டணியில் விரிசல்? பரபர பேச்சு
கொல்கத்தா: எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி தலைமை மீது திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், வாய்ப்பு கிடைத்தால் மேற்கு வங்கத்தில் இருந்தபடியே இந்தியா கூட்டணியைத் தலைமையேற்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக கூட்டணியை எதிர்க்க பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. லோக்சபா தேர்தல் மற்றும் பல மாநிலச் சட்டசபை தேறுதலைகளை எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியாகவே சந்தித்தன.

அதேநேரம் இந்தியா கூட்டணியில் போதிய ஒருங்கிணைப்பு இல்லை என்ற புகார் தொடர்ந்து இருக்கிறது. இதற்கிடையே இப்போது மம்தா பானர்ஜியே இந்தியா கூட்டணி தலைமை வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
மம்தா அதிருப்தி: இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்திய மம்தா பானர்ஜி, வாய்ப்பு கிடைத்தால் இந்தியா கூட்டணியைத் தலைமையேற்கவும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்தியா கூட்டணியை உருவாக்கிய தலைவர்களில் தானும் ஒருவர் என்று குறிப்பிட்ட அவர், வாய்ப்பு கிடைத்தால் இந்தியா கூட்டணிக்குத் தலைமையேற்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் எனக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், இப்போது அதை வேறு சிலர் முன்னின்று நடத்தி வருகிறார்கள். அவர்களால் அதை முறையாக வழிநடத்த முடியவில்லை என்றால் என்னால் என்ன செய்ய முடியும்? என்னைக் கேட்டால் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றே சொல்வேன்" என்றார்.
தலைமையேற்கத் தயார்: இந்தியா கூட்டணிக்கு நீங்கள் ஏன் தலைமையேற்கவில்லை என்ற கேள்விக்கு அவர், "வாய்ப்பு கிடைத்தால்.. நான் தலைமையேற்கத் தயாராகவே இருக்கிறேன். மேற்கு வங்கத்தை விட்டுவிட்டுச் செல்ல எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் இங்கிருந்தபடியே என்னால் அதைச் செய்ய முடியும்" என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திரிணாமுல் எம்பி கீர்த்தி ஆசாத், இந்தியா கூட்டணியை மம்தா வழிநடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் இப்படிக் கூறி சில நாட்களில் மம்தாவும் தலைமையேற்கத் தயார் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் திரிணாமுல் எம்பி கீர்த்தி ஆசாத் கருத்தைக் காங்கிரஸ் ஏற்கவில்லை. அப்போதே காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இது ஒரு நல்ல ஜோக் என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவை தேசியளவில் எதிர்கொள்ள இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. அதில் 10க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. இருப்பினும், கருத்து வேறுபாடுகள், ஒருங்கிணைப்பு இல்லாமலேயே அந்தக் கட்சிகள் செயல்பட்டு வருவதாகத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பு: குறிப்பாக இப்போது நாடாளுமன்றத்தில் இப்போது குளிர்கால கூடத்தொடர் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகள் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதானி லஞ்சம் தொடர்பாகப் போராட்டம் நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதை திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் புறக்கணித்தன.
அதானி விவகாரத்தைக் காட்டிலும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என திரிணாமுலும், சம்பல் வன்முறையைக் குறித்துப் பேச வேண்டும் என சமாஜ்வாதி கட்சியும் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications