"ராஜினாமா செய்ய மாட்டேன்!" பிடிவாதம் பிடிக்கும் மம்தா.. அடுத்து என்ன நடக்கும்.. சட்டம் சொல்வது என்ன?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. இருப்பினும், மம்தா பானர்ஜி தனது முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை எனக் கூறியுள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் தோல்வி அடைந்த முதல்வர்கள் ராஜினாமா செய்யும் நிலையில், மம்தா இந்த முடிவை எடுத்துள்ளார். இப்போது மேற்கு வங்கத்தில் அடுத்து என்ன நடக்கும்.. சட்டப்படி என்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மேற்கு வங்க தேர்தலில் பாஜக திரிணாமுஸ் காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. மிக எளிதாக திரிணாமுல் காங்கிரஸை பாஜக வீழ்த்தியது. அங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ள நிலையில், பாஜக 207 இடங்களில் வென்றது. திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டுமே வென்றது.

மம்தா
குறிப்பாக அக்கட்சியின் தலைவர் மம்தா கூட பவானிபூரில் தோல்வி அடைந்தார். இந்த தோல்வி திரிணாமுல் காங்கிரஸுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது. இதற்கிடையே தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளதாக மம்தா குற்றஞ்சாட்டினார். இதனால் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை என்றும் இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
நமது நாட்டில் பொதுவாகவே தேர்தலில் தோல்வி அடைந்தால் உடனடியாக பிரதமர், முதல்வர் என யாராக இருந்தாலும் ராஜினாமா செய்வார்கள். தங்கள் பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் தருவார்கள். ஆனால், மம்தா இதுபோல கூறியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதனால் மேற்கு வங்கத்தில் அடுத்து என்ன நடக்கும்.. புதிய அரசு எப்படிப் பதவியேற்கும் எனப் பல கேள்விகள் எழுந்தன.
என்ன நடக்கும்!
ஆனால், அவர் ராஜினாமா செய்கிறாரா இல்லையா என்பது முக்கியம் இல்லை.. மேற்கு வங்க அரசின் ஐந்து ஆண்டுக்கால பதவிக்காலம் மே 6ம் தேதி, அதாவது இன்றுடன் முடிவுக்கு வருவதாகவே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சூழலில், மம்தா பானர்ஜியின் பிடிவாதம் குறித்து அரசியல் சட்ட வல்லுநர்கள் மிகத் தெளிவான விளக்கங்களை முன்வைக்கின்றனர்.
இந்திய அரசியல் சாசனத்தின் விதி 172-ன் படி, ஒரு மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் அதன் முதல் கூட்டத்திலிருந்து சரியாக ஐந்து ஆண்டுகள் மட்டுமே. இந்தக் காலம் முடிவடைந்ததும், அவசரநிலை அறிவிப்பில் இருந்தால் தவிர, அந்தச் சட்டமன்றம் தானாகவே கலைந்துவிடும். அதன்படி, 2021 தேர்தலின் அடிப்படையில் மே 7ம் தேதியன்று அமைந்த மம்தா அரசு, இன்று மே 6ம் தேதியுடன் அரசியல் சாசனப்படி அதிகாரத்தை இழந்துவிடும்.
முக்கியம் இல்லை
இது தொடர்பாக முன்னாள் மக்களவைச் செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி கூறுகையில், "மம்தா பதவி விலகுகிறாரா இல்லையா என்பது முக்கியமல்ல.. மே 6ம் தேதியுடன் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகியே ஆக வேண்டும்" என்றார். அதேபோல மம்தா தானாக முன்வந்து பதவி விலகவில்லை என்றால், ஆளுநர் அந்த அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு முழு அதிகாரம் பெற்றுள்ளார். இது அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டதே என்கிறார் மூத்த வழக்கறிஞர் சேகர் நாபாடே குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைய முடிவுகளே இறுதியானது
தேர்தல் முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் மனுவைத் தாக்கல் செய்யலாம். ஆனால், இந்த மனுவைத் தாக்கல் செய்வதால் தற்போதைய தேர்தல் முடிவுகளையோ அல்லது புதிய அரசு பதவியேற்பதையோ தடுத்து நிறுத்த முடியாது. 1986-ல் அசார் உசேன் Vs ராஜீவ் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது போல, முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஒரு தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்ய முடியும். அதுவரை தேர்தல் ஆணையத்தின் முடிவுகளே இறுதியானது.
அதாவது மம்தா ராஜினாமா செய்கிறாரா இல்லையா என்பது முக்கியமே இல்லை. அவர் ராஜினாமா செய்யவில்லை என்றாலும் கூட இன்றுடன் அவரது பதவி முடியப் போகிறது.












Click it and Unblock the Notifications