தேர்தல் ஆணையம் பாஜகவிடம் விற்பனையாகி விட்டது: மம்தா பானர்ஜி கடும் தாக்கு
மதுராப்பூர்: "ஒரு நேரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட்டது; இன்று அது பாஜகவிடம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது," என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடைசி கட்ட தேர்தல் வரும் 19ந் தேதி நடக்கிறது. இதனால், அங்கு தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக, தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடி மற்றும் மம்தா பானர்ஜி இடையிலான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி நடந்தது. கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே பேரணி செல்லும்போது, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸார் இடையே கடும் மோதல் எழுந்து வன்முறையில் முடிந்தது.
தீவைப்பு சம்பவங்களும் நடந்ததுடன், அம்மாநிலத்தின் சீர்த்திருத்தவாதிம், கல்வியாளருமாக விளங்கிய இஷ்வார் சந்திரா வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி கொள்கின்றனர்.
இதுகுறித்து பாஜக அளித்த புகாரின்பேரில், கடைசி நாள் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வரும் 19ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நாளை மாலை வரை பிரச்சாரம் செய்ய முடியும். ஆனால், இன்று இரவு 10 மணியுடன் பிரச்சாரம் முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விஷயம், அம்மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை கடுமையாக சாடியுள்ளார்.
மதுராப்பூர் என்ற இடத்தில் ஆதரவாளர்களிடம் பேசும்போது மம்தா கூறியதாவது,"மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரங்களை இன்று முடித்தவுடன் தடை அமலுக்கு வருகிறது. அதன்பிறகு நாங்கள் மேற்கொண்டு பிரச்சாரம் செய்வதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்பது பட்டவர்த்தமாக தெரிகிறது.
ஒருநேரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலை அமைப்பாக இருந்தது. ஆனால், தற்போது அது பாஜகவிடம் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இதை சொல்வதற்கு கஷ்டமாக இருக்கிறது. இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த உண்மையை சொல்வதற்கு நான் அச்சப்படவில்லை. இதை சொல்வதற்காக சிறை செல்வதற்கும் தயார்," என்று கூறி இருக்கிறார்.
கொல்கத்தாவில் உடைக்கப்பட்ட வித்யாசாகர் சிலைக்கு பதிலாக பெரிய சிலையை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறி இருக்கிறார். இதற்கு பதலடி தரும் விதத்தில், மதுராப்பூர் கூட்டத்தில் மம்தா பேசினார். அப்போது, "சிலைகளை உடைப்பது என்பது பாஜகவின் வழக்கம். திரிபுராவில் இதைபோன்று நிறையவே அக்கட்சி செய்திருக்கிறது.
அவர்களது பணத்தை நாங்கள் எடுத்து நாங்கள் ஏன் சிலை அமைக்க வேண்டும். வங்காளத்தின் பொருளாதாரம் வளமாகவே இருக்கிறது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகங்களில் போலி வீடியோக்களை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
அது வன்முறையை தூண்டும். மேற்கு வங்கத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை பாஜக சிதைத்துவிட்டது. பாஜகவை ஆதரிப்பவர்களை சமூகம் ஆதரிக்காது," என்று மம்தா பானர்ஜி பேசினார்.
இதனிடையே, மோடி பிரச்சாரம் முடிந்தவுடன் பிரச்சாரத்தை தடை செய்யும் நோக்கில் செயல்பட்டதாக எழுந்த புகார்களை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. உயர் அதிகாரியின் பரிந்துரைகளை ஆய்வு செய்த பிறகே இந்த முடிவு எட்டப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்ய கடைசி வாய்ப்பாக கருதியே உடனடியாக தடை விதிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications