மம்தா பானர்ஜி பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. கொல்ல சதி என குற்றச்சாட்டு
பீகாரில் இருந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஏற்றிச் சென்ற விமானம் தரையிறங்க காலதாமதம் ஏற்ப்பட்டதால் அதனை சதிச் செயல் என்று திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கொல்கத்தா: பீகாரில் இருந்து தனி விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதன்கிழமை இரவு சென்றார். அந்த விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்பகிறது. ஆனால் இது சதிச் செயல் என்று திரிணமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பாட்னாவில் திட்டமிட்ட நேரத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து புதன்கிழமை இரவு 7.35 மணி அளவில் தனிவிமானம் மூலம் மம்தா பானர்ஜி கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். அந்த விமானம் 9 மணி அளவில் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. அதனை கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு முன்பாக வானத்தில் சுமார் 30 நிமிடங்கள் பறந்து கொண்டிருந்ததாக தெரிகிறது.
இது தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வழக்கமான ஒன்றுதான் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சம்பவம் திரிணமூல் காங்கிரஸ் தலைவரைக் கொல்வதற்கு நடந்த சதி என்று அக்கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக, மம்தா பானர்ஜியுடன் விமானத்தில் உடன் வந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பிர்கத் ஹக்கீம் கூறியிருப்பதாவது:
கொல்கத்தாவில் இன்னமும் 5 நிமிடத்தில் விமானம் தரையிறங்கி விடும் என்று விமான ஓட்டி அறிவித்த நிலையில் ஏடிசி தாமதமாக தரையிறங்க அனுமதி அளித்ததாக கூறுவது கடும் ஆட்சேபத்துக்குரியது.
இந்த நடவடிக்கை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜியை கொல்ல நடந்த திட்டமிட்ட சதி என்று அவர் குற்றம் சுமத்தினார். விமானம் போதிய எரிபொருள் இல்லாமல் விமானத்தில் பறந்து கொண்டிருந்தது. எனவே அதனை உடனடியாக தரையிறக்க விமான ஓட்டி அனுமதி கோரினார். ஆனால் அதனை பொறுப்படுத்தாமல் ஏடிசி கிடப்பில் போட்டுவிட்டது.
இது ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் திரிணமூல் தலைவரும் மேற்குவங்க மாநில முதலமைச்சருமான மம்தாவைக் கொல்ல நடந்த சதிச் செயல் என்றார் அவர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏடிசி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அது குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.