ஆதார் நம்பர் கேட்கும் 'மிரட்டல் மெசேஜ்கள்'.. அசராத அரசு.. அடுத்து என்ன?
அந்தரங்க உரிமை குறித்து தெளிவாக உள்ள தீர்ப்பு மம்தாவுக்கு சாதகமாகும். அதை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இந்த மிரட்டல் மெசேஜ்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
டெல்லி: ஆதார் எண் கேட்டு தொல்லை தரும் செல்போன் நிறுவனங்களுக்கு எதிராகவும், அதற்கு அடித்தளம் போடும் மத்திய அரசுக்கு எதிராகவும், முஷ்டியை முறுக்கியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
தினமும் காலையில் விழித்ததுமோ, அல்லது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என காபியோடு சாய்ந்து அமரும் மாலை வேளையிலோ, பகீரென பீதியை கிளப்பும் ஒரு எஸ்எம்எஸ் தினமும் உங்களுக்கு வருகிறதா.
அலர்ட்! என்று அபாய சங்குடன் அந்த மெசேஜ் விரிவடைகிறதா? ஆதார் எண்ணை இந்த செல்போன் எண்ணுடன் விரைவிலேயே இணைத்துவிடாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அது மிரட்டுகிறதா? இதற்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்பதாக இருந்தால் இது உங்கள் ஒருவரின் பதில் இல்லை. ஒட்டுமொத்த இந்தியர்களின் பதிலும் அதேதான்.
அசையாத மத்திய அரசு
ஆதார் எண்ணை அரசின் அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயப்படுத்த கூடாது, ஆதார் எண் என்பது அந்தரங்க உரிமையை பாதிக்க கூடாது.., இப்படியெல்லாம் எத்தனை முறை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சம்மட்டியால் அடித்தாலும், அசைந்து கொடுக்காமல் அடம் பிடிக்கும் மத்திய அரசின் உறுதியால்தான் இந்த பகீர் மெசேஜ்களை நாம் பார்க்க வேண்டியதாக உள்ளது.
மிரட்டும் மெசேஜ்கள்
ஆதார் எண்ணை இணைப்பதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, நேரம் இருக்கிறதோ இல்லையோ, அதெல்லாம் முக்கியமில்லை. எங்களுக்கு எங்கள் வேலை ஆக வேண்டும் என்ற மிரட்டும் தொனிதான் இதில் தென்படுகிறது. இதில் ஐடியாவும் ஒன்றுதான் வோடபோனும் ஒன்றுதான். இந்த விஷயத்தில் அவர்களுக்குள் எந்த தொழில் போட்டிகளும் கிடையாது. அத்தனை செல்போன் நிறுவனங்களும், இந்த 'மிரட்டல் மெசேஜ்களை' அனுப்பியபடியேதான் உள்ளன.
ஆபீஸ் போகனும்
ஆதார் எண்ணை இணைக்க விரும்புவோருக்கும் கூட அதற்கான வசதியை செல்போன் நிறுவனங்கள் எளிமையாக்கவில்லை. செல்போன் நெட்வொர்க் அலுவலகம் சென்றுதான் இதை நாம் செய்ய முடியும். இதற்கெல்லாம் யாருக்கும் நேரம் காலம் இல்லை. இந்த நிலையில்தான், பிற மாநில முதல்வர்கள் சும்மா இருக்கும்போது, எனது செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க மாட்டேன் என பகிரங்கமாக அறிவித்தார் மம்தா பானர்ஜி.
நல்ல தீர்ப்பு வரட்டும்
இதை வாய் வார்த்தையாக மட்டுமே சொல்லிப்போகவில்லை. உச்சநீதிமன்றத்தின் படியேறிவிட்டார் மம்தா. இரண்டில் ஒன்று பார்க்காமல் விடமாட்டார் என நம்பலாம். ஏற்கனவே உச்சநீதிமன்றம், அந்தரங்க உரிமை குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ள தீர்ப்பு மம்தாவுக்கு சாதகமாகும். அதை அடிப்படையாக கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இந்த மிரட்டல் மெசேஜ்கள் நிறுத்தப்படும் என எதிர்பார்க்கலாம். இன்னொரு விஷயத்தை இப்போது சொல்லியே ஆக வேண்டும். ஆதார் கொடு, அதை கொடு, இதை கொடு என கேட்டு செல்போன் எண்களை துண்டித்துவிடாதீர்கள். அப்புறம் மிஸ்டு கால் கொடுத்து உங்கள் கட்சியில் சேரவும் ஆளில்லாமல் போய்விடும் பார்த்துக்கோங்க.